சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் நல்லகண்ணு (வயது 101) வயது மூப்பு காரணமாகப் பல மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அதனைத் தொடர்ந்து நல்லகண்ணு, மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருத்துவக் கண்காணிப்பில் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். 

Advertisment

இத்தகைய சூழலில் தான் மூச்சுத் திணறல் காரணமாகக் கடந்த 1ஆம் தேதி நல்லகண்ணு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்படி கடந்த 25 நாட்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணுவின் உடல்நிலையில் நேற்று முன்தினம் (23.02.2026) இரவு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. 

Advertisment

இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்திருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று (25.02.2026) மதியம் 01.55 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

nallakannu-ayya

இது தொடர்பாக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “01.02.2026 அன்று  நல்லக்கண்ணு உடல் நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 24 தினங்களாக சிகிச்சையின் போது அவரது உடல் நிலையில் ஏற்றதாழ்வுகள் இருந்து வந்தது. பல்துறை மருத்துவக்குழு தீவிர சிகிச்சையும், அதிதீவிர கண்காணிப்பையும் தொடந்து வந்தனர். இன்று அதிகாலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்து, அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. அதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததால், நல்லக்கண்ணு 25. 02 2026 அன்று பிற்பகல் 1. 55 மணியளவில் நம்மை விட்டு பிரிந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். 

Advertisment

அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும், உறவினர்களுக்கும் இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. மேலும், அவரது சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவக்குழுக்களுக்கும், தமிழக அரசுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.