complaint against Vijay Controversy at the TVk 3rd anniversary inauguration ceremony
தமிழக வெற்றிக் கழகத்தின் 3ஆம் ஆண்டு தொடக்க விழா அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் நேற்று (02.02.2026) காலை கொண்டாடப்பட்டது .இதனையொட்டி நேற்று அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழக மூன்றாம் ஆண்டு துவக்க விழா அக்கட்சியின் தலைமை அலுவலகமான பனையூரில் நடைபெற்றது.
இந்த விழாவின் போது, கடவுள் முருகன் பக்தி பாடலான ‘உள்ளத்திலே நீ இருக்க’ என்ற பாடலை, பாடகர் வேல்முருகன் மாற்றி அமைத்து விஜய்யை புகழ்வது போல் திரித்து பாடினார். அதனை தொடர்ந்து, “தளபதி வாழ்க தளபதி வாழ்க...” என்ற பாடலை வேல்முருகன் பாடினார். அதன் பின்னர் பாடகர் வேல்முருகனுக்கு, விஜய் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். அதனை தொடர்ந்து வேல்முருகன் வேண்டுகோளுக்கு இணைங்க வேல்முருகன் மற்றும் அவரது மகளுடன் சேர்ந்து விஜய் சிறிது நேரம் நடனம் ஆடினார். முருகன் பக்தி பாடலை, விஜய்யை புகழ்வது போல் திரித்து வேல்முருகன் பாடியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய், தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, பாடகர் வேல்முருகன் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், தவெக 3ஆம் ஆண்டு தொடக்க விழாவில் முருகன் பக்தி பாடலை பாடகர் வேல்முருகன், விஜய்யை புகழ்வது போல் திரித்து பாடியுள்ளார். இதனால், பக்தர்களின் மனம் புண்பட்டுள்ளது. எனவே தவெக தலைவர் விஜய், தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, பாடகர் வேல்முருகன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் நெல்லை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதே போல், மதுரை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பா.ஜ.க பரப்புரை பிரிவைச் சேர்ந்தவர்களும் தவெக தலைவர் விஜய்க்கு எதிராக புகார் அளித்துள்ளனர்.
Follow Us