உச்ச நீதிமன்றக் கொலீஜியம் நேற்று (26.02.2026) நடத்திய கூட்டத்தில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி கேரளா (கேரளம்) உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்து வரும் சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா வரும் மார்ச் மாதம் 05ஆம் தேதி (05.03.2026) ஓய்வு பெறுவதையொட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெறப் பரிந்துரைக்கப்பட்டுள்ள எஸ்.ஏ. தர்மாதிகாரி, அரவிந்த் எச். தர்மாதிகாரி - சுபா தர்மாதிகாரி தம்பதியினருக்கு மகனாகக் கடந்த 1966ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி (08.07.1966) அன்று தற்போதைய சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூரில் எஸ்.ஏ. தர்மாதிகாரி பிறந்தார். இவர் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் மற்றும் சட்டத்தில் இளங்கலைப் பட்டங்களைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து 1992ஆம் ஆண்டு ஜபல்பூரில் உள்ள மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். இதனையடுத்து 2000 முதல் 2015ஆம் ஆண்டு வரை மத்திய அரசின் ஆலோசகராக வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
மேலும் வருமான வரித் துறை, இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய கலால் துறை (மூத்த வழக்கறிஞர்), ஹோஷங்காபாத் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களுக்காகவும் ஆஜராகியுள்ளார். கேந்திரிய வித்யாலயா சங்கதன், பிஎஸ்என்எல் மற்றும் போபால் எரிவாயு விபத்து நிவாரண நல ஆணையர் சார்பாகவும் இவர் வாதிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் பின்னர், 2018ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி நிரந்தர நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/27/hc-2026-02-27-08-12-15.jpg)
இதனையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கேரள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, நீதிபதியாகப் பதவிப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அதே சமயம் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள லிசா கில், ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.மேலும் இது தொடர்பாக கொலீஜியம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “நீதித்துறை நிர்வாகத்தின் தரம் மற்றும் செயல்திறனை மேம்படுத்த கொலீஜியம் ஒரு புதிய கொள்கை முடிவை எடுத்துள்ளது.
இதன்படி, உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க உள்ளவர், அந்தப் பதவி காலியாவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே அந்த நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவார். இதன் மூலம் அவர் அந்த நீதிமன்றத்தின் செயல்பாடுகளை முன்கூட்டியே நன்கு அறிந்து கொண்டு, பொறுப்புகளைச் சிறப்பாகக் கையாள முடியும். இந்தக் கொள்கையின் அடிப்படையில், நீதிபதி லிசா கில் உடனடியாக ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறார். அதன் பின்னர் அவர் பதவி உயர்வு பெறுவார். தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான கொலீஜியம் இந்த முடிவுகளை எடுத்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t111116874z-prabhu-2026-02-07-16-41-12.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/27/mhc-cj-sushrut-arvind-dharmadhikari-2026-02-27-08-11-29.jpg)