குஜராத் மாநிலம் சூரத் நகரிலுள்ள சுவாமிநாராயண் கோயில் வளாகத்தின் குளியலறைக்குள் இருந்து கல்லூரி மாணவிகள் இருவர் சடலமாக மீட்கப்பட்டனர். இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீட்கப்பட்ட உடல்களை காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தடயவியல் நிபுணர்களும், சம்பவ இடத்தில் இருந்த பொருட்கள் மற்றும் தடயங்களைச் சேகரித்துச் சென்றனர்.
இது குறித்து டின்டோலி காவல்நிலையத்தில் விபத்து மரணம் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து, "கல்லூரி மாணவிகள் இருவரும் நேற்று முன்தினம் (06.03.2026) கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். பின்பு, நீண்ட நேரமாக அவர்கள் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன உறவினர்கள் இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அவர்களது போன் நம்பரை ஆய்வு செய்தனர். அதில் அவர்கள் இறுதியாக, சுவாமிநாராயண் கோயிலுக்குச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, காவல்துறையினர் கோயிலுக்குச் சென்று பார்த்தபோது, மாணவிகளின் இருசக்கர வாகனங்கள் கோயில் வளாகத்தில் இருந்ததை கண்டறிந்தனர். பின்பு, அங்குள்ள சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டது. அதில், மாணவிகள் இருவரும் அங்குள்ள குளியலறைக்குள் சென்றது தெரியவந்தது. காவல்துறையினர் அந்த குளியலறை அருகே சென்று பார்த்த போது, அறை உள் பக்கமாக தாளிடப்பட்டு இருந்தது. உடனே காவல்துறையினர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.
அப்போது மாணவிகள் இருவரும் இறந்து கிடந்தனர். அருகே ஊசி மற்றும் மருந்து பாட்டில்கள் இருந்தது. அருகில் இருந்த அவர்களது போன்களை ஆராய்ந்த போது, அவர்கள் செயற்கை நுண்ணறிவிடம் தற்கொலை செய்து கொள்வது எப்படி? என்று அவர்கள் ஆராய்ந்துள்ளனர்" எனத் தெரியவந்துள்ளது. மேலும், இது குறித்து காவல்துறையினர் இது தற்கொலையாக இருக்குமோ? என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us