Coimbatore Airport incident - Student's decision after the verdict Photograph: (kovai)
கடந்த வருடம் கோவை விமான நிலையம் பின்புறம் ஆளரவமற்ற பகுதியில் காரில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பெண் போதை இளைஞர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தில் மாணவியை காரில் அழைத்து சென்ற காதலன் முக்கிய முடிவை எடுத்துள்ளார்.
கடந்த வருடம் 02.11.2025 அன்று கோவை பீளமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரவு ஆண் நண்பருடன் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்களால் கல்லூரி மாணவி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது.
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் சட்டவிரோத மதுபான பார் இயங்கி வந்ததாக புகார் எழுந்தது. இதை அறிந்து அங்கு வந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாரில் இருந்த மது பாட்டில்களை கைப்பற்றி உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு வந்த போலீசார் அவரிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சட்டவிரோத பாரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு காரணம். இதை நடத்தியது யார்? எனக் கேள்வி எழுப்பினர்.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தொடர்ந்து இந்த சம்பவமும் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சிவகங்கையைச் சேர்ந்த கருப்பசாமி, காளீஸ்வரன், மதுரையைச் சேர்ந்த தவசி ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 5 மாதங்களாக கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் 72 பேரிடம் சாட்சி விசாரணைகள் நடைபெற்றது. இந்நிலையில் நீதிபதி இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரும் குற்றவாளிகள் என அறிவித்ததோடு மூவருக்கும் சாகும் வரை (வாழ்நாள் சிறை) ஆயுள் தண்டனை என தீர்ப்பளித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு தீர்ப்பு கிடைத்துள்ள நிலையில் கோவையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மாணவியை முன்னதாக கோவை விமான நிலையத்திற்கு பின்புறமாக காரில் அழைத்துசென்ற ஆண் நண்பர் மாணவியை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு மனநல கவுன்சிலிங் மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகியவை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மாணவி நலமுடன் இருப்பதாக கூறப்படும் நிலையில் மாணவியை மனரீதியாக தேற்றுவதற்காக காதலனும் முயன்று வருகிறார். பெற்றோரிடம் அனுமதிபெற்று வீட்டிலேயே தனி அறை ஒதுக்கி மாணவியை தங்க வைக்கப்பட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் நட்பு மலர்ந்து பின்னர் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு கிடைத்த நிலையில் மாணவியை திருமணம் செய்துகொள்ள காதலன் ஒப்புதல் கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தை 'ஒரு கெட்ட கனவாக மறந்து விட்டு' மாணவியோடு வாழ்க்கையில் இணைய ஆண் நண்பர் முடிவெடுத்துள்ளதாக இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஜிசா தெரிவித்துள்ளார்.
Follow Us