actor krishna Photograph: (actor krishna)
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் தகவல்கள் வெளியாகி இருந்தது. அதில், ஏ1 குற்றவாளி பிரதீப் குமார் கொடுத்த தகவல் அடிப்படையில் ஸ்ரீகாந்த்தை போலீசார் கைது செய்தனர். ஏ2 குற்றவாளியாக ஜான் என்பவர் உள்ளார். ஏ3 குற்றவாளியாக நடிகர் ஸ்ரீகாந்த்தை சேர்த்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. Narcotic Drugs And Psychotropic Substances Act- NDPS 8(C), 29(1), 22(b) உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஸ்ரீகாந்த் இல்லத்தில் இருந்து ஒரு கிராம் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை உட்கொண்ட காரணத்திற்காக அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் கிருஷ்ணா நேற்று சரியாக 2 மணியளவில் காவல் நிலையத்தில் ஆஜரான நிலையில் பல்வேறு கோணங்களில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது நெகட்டிவ் என வந்ததாகக் கூறப்படுகிறது. தனக்கு இரைப்பை அலர்ஜி உள்ளிட்ட உடல்நிலை பிரச்சினை இருப்பதால் போதைப் பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை. தன்னைப் பற்றிய செய்திகள் அனைத்தும் பொய் என கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வைத்து சுமார் 22 மணி நேரத்திற்கு மேலாக அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. வீட்டிலும் சோதனை நடைபெற்றது. வீட்டில் எந்தவிதமான ஆவணங்களும், போதைப்பொருளும் சிக்கவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக சமூக வலைத்தள கணக்கு மற்றும் வாட்ஸ் அப் சாட் உள்ளிட்டவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
குறிப்பாக அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்-நடிகர் கிருஷ்ணா இவர்களுக்கு இடையே நடந்த வங்கி மற்றும் ஜிபே பரிவர்த்தனை உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி போலீசார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத்துக்கு 50 லட்சம் ரூபாய் வரை கிருஷ்ணாவின் நண்பர் ஒருவர் கொடுத்ததாகவும், ஆனால் பிரசாத் அதனைத் திருப்பத் தராமல் ஏமாற்றியதால் ஒரு வருடமாக தனக்கும் பிரசாத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என கிருஷ்ணா வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது.
நண்பர்களுக்குள்ளே கிருஷ்ணா ஒரு குறிப்பிட்ட 'கோட் வேர்ட்' மூலம் பேசியது தொடர்பான மெசேஜ்கள் அழிக்கப்பட்டு இருப்பதால் அதனை மீட்டு விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.