தமிழ்நாட்டின் நலன் மீது கொஞ்சமும் அக்கறையில்லாத அ.தி.மு.க, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து தமிழர்களுக்கு மிகப் பெரும் துரோகத்தை இழைத்து வருகிறது என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், வீட்டில் ஓய்வெடுத்தும் வந்தேன். சிகிச்சை ஓய்வு என்று சொன்னாலும், மருத்துவமனையில் இருந்தபடியே அரசு அலுவல்களையும் கட்சிப் பணிகளையும் செய்துகொண்டுதான் இருந்தேன். ஓய்வுக்குப் பிறகு, தலைமைச் செயலகத்தில் என்னுடைய வழக்கமான பணிகளைத் தொடங்கியும், நேற்று (02.08.2025) கட்சியின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில், ‘உடன்பிறப்பே வா’ என உத்திரமேரூர் தொகுதி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தேன். 

அரசுப் பணிகளுக்கிடையில், நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதுவரையில் 39 தொகுதிகளின் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்திருக்கிறேன். இந்தச் சந்திப்பு அடுத்தடுத்து தொடர உள்ளது. கலைஞரை இயற்கை அவரை நம்மிடமிருந்து பிரித்து 7 ஆண்டுகளானாலும் அவர்தான் நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கிறார். நான்காண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நாள்தோறும் மாநில உரிமைகளுக்கான போராட்டம்தான். முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வு, உதய் மின்திட்டம் , சொத்து வரி உள்ளிட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசின்  வஞ்சகத் திட்டங்களுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததால், தமிழ்நாடு அதன் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. 

தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்திடுவதற்காக நாடாளுமன்றத்தில் போர்க்குரல் எழுப்புவதோடு, உச்சநீதிமன்றத்திலும் சட்டப்போராட்டத்தை நடத்துகிறது திமுக அரசு. அதற்கான நெஞ்சுரத்தை  தந்திருப்பவர் ‘மானமிகு சுயமரியாதைக்காரர்‘ எனத் தன்னை அடையாளப்படுத்திய கலைஞர் தான். பா.ஜ.க. ஆட்சி செய்யாத - ஆட்சிக்கே வர முடியாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அதிகாரப் பறிப்பு செய்யும் ஜனநாயகப் படுகொலை தொடர்ந்து வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு முன்னெடுத்த சட்டப்போராட்டத்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசே அதிகாரம் படைத்தது என்பது நிலைநாட்டப்பட்டு, தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்குமான ஜனநாயக நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது. 

இந்தப் போராட்டங்களை இன்னும் வலிமையாகத் தொடர வேண்டியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் நலன் மீது கொஞ்சமும் அக்கறையில்லாத அ.தி.மு.க, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து தமிழர்களுக்கு மிகப் பெரும் துரோகத்தை இழைத்து வருகிறது. உண்மையான அ.தி.மு.க தொண்டர்களே மனம் புழுங்குகிற வகையில், அடிப்படைக் கொள்கைகள் ஏதுமற்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி டெல்லி வரை சென்று மண்டியிட்டு பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார். சேராத இடந்தன்னில் சேர்ந்து தீராத பழி சுமந்தபடி ஊர் ஊராகப் பயணித்து, பொய்களைப் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார். இந்தியாவின் முதல் செம்மொழி என்ற தகுதிபெற்ற தமிழுக்கு மிகக் குறைந்த நிதியை ஒதுக்குகிற தமிழர் விரோத ஒன்றிய பா.ஜ.க. அரசு, சமஸ்கிருத மொழிக்குப் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொட்டிக் கொடுக்கிறது. 

Advertisment

இந்தி அல்லாத மொழிகளைச் சிதைக்கின்ற வகையில் ‘தேசியக் கல்விக் கொள்கை 2020’ மூலம் இந்தி மொழியைத் திணிக்க முயற்சிக்கிறது. ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடைக்கின்ற கல்வியைப் பறிக்கின்ற வகையில் குலக்கல்வி முறையைக் கொண்டு வரத் துடிக்கிறது. அறிவியல்பூர்வமாக நிறுவப்பட்ட தமிழர் பண்பாட்டு அடையாளமான கீழடி அகழாய்வு முடிவுகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளியிட மறுக்கிறது. ஆரியப் பண்பாட்டை நம் மீது திணிக்கப் பார்க்கிறது.

கலைஞர் இன்று நம்முடன் இருந்திருந்தால் எத்தகைய உணர்வெழுச்சியுடன் ஒன்றிய அரசை எதிர்த்து நிற்பாரோ, அவரிடம் அரசியல் பாடம் கற்ற திமுகவினரான நாமும் அதே உணர்வுடன் ஒன்றிய பா.ஜ.க. அரசின் தமிழர் விரோத - மனிதகுல விரோத சூழ்ச்சிகளை எதிர்த்து நிற்கிறோம். எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க.வோ அடங்கி ஒடுங்கி பா.ஜ.க.வுக்கு அடிமைச் சேவகம் செய்து கொண்டிருக்கிறது. ‘வீரன் சாவதே இல்லை. கோழை வாழ்வதே இல்லை’ என்றார் கலைஞர். கலைஞரின் நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7 அன்று நடைபெறும் அமைதிப் பேரணியில் திமுக தொண்டர்கள் திரண்டு வணக்கத்தைச் செலுத்துவோம். 2026 சட்டமன்றத் தேர்தலில் 7ஆவது முறையாகக் திமுக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.