பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118வது பிறந்த நாள் விழா மற்றும் 63வது குருபூஜை, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று (30.10.2025) நடைபெற்று வருகிறது. இதனையொட்டி மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த உருப்படத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார்.  இதனையடுத்து அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோரும்  முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். 

Advertisment

அதன் பின்னர் முதல்வர் மு.க. ஸ்டாலின், மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது,  ஐ. பெரியசாமி, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், டி.ஆர்.பி. ராஜா மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் உடனிருந்தனர்.

Advertisment

அங்கிருந்து சாலை மார்க்கமாக பசும்பொன் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் பங்கேற்க உள்ளார். அப்போது முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். மேலும் முதல்வருடன் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் எனப் பலரும் மரியாதை செலுத்த உள்ளனர்.