தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை சார்பில், தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் மூலம் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நவீன வசதிகளுடன் பெண்கள் தங்குவதற்காக ‘தோழி’ விடுதிகள் செயல்பட்டு வருகிறது. பணி நிமித்தமாக வெளி மாவட்டங்களில் இருந்து பிற இடங்களுக்கு சென்று பணிபுரியும் மகளிர் நலனைப் கருத்தில் கொண்டு பாதுகாப்பான விடுதிகளை மாணவிகள் மற்றும் மகளிருக்கு வழங்கும் பொருட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி (13.07.2023) தொடங்கி வைக்கப்பட்டது.

Advertisment

இந்த விடுதிகளில் 24 மணி நேரமும் பாதுகாப்பு வசதி, பார்க்கிங் வசதி, பயோ-மெட்ரிக் வசதி, இலவச வை- பை, பொழுதுபோக்கு அம்சங்கள், அயனிங் வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த தோழி விடுதிகள் குறித்த முழுமையான விவரங்களை www.tnwwhcl.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். விடுதி அறைகளில் தனியாகவும், இருவர், நான்கு பேர், ஆறு பேர் என அறையை பகிர்ந்து கொள்ளும் வசதியும் உள்ளது. 

Advertisment

இத்தகைய சூழலில் தான்12 இடங்களில் தோழி விடுதிகள் கட்ட தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. அதாவது சுமார் 62 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 740 பணிபுரியும் மகளிர் பயன் பெறக்கூடிய வகையில் 12 புதிய தோழி விடுதி அமைக்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருப்பத்தூர், நாமக்கல், மயிலாடுதுறை, விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை அரியலூர், திருவாரூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் புதிதாக 12 தோழி விடுதிகள் அமைக்கும் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (13.11.2025)  அடிக்கல் நாட்டி அதற்கான பணிகளைக் காணொளி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். 

thozhi-hostel
கோப்புப்படம்

இதனையடுத்து  கோவை மாவட்டம் பூஞ்சோலை என்ற இடத்தில்  அரசினர் மாதிரி கூர்நோக்கு இல்லத்திற்கும், திருச்சியில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் 27.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய கட்டிடங்களுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் சென்னை ராயபுரம் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். 

Advertisment