பா.ஜ.கவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதற்கான சான்றுகளை கடந்த 7ஆம் தேதி ராகுல் காந்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதாவது, 2024 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியான மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 11,965 போலி வாக்காளர்கள், 40,009 போலி மற்றும் செல்லாத முகவரிகளைக் கொண்ட வாக்காளர்கள், 10,452 ஒற்றை முகவரி வாக்காளர்கள், 4,132 செல்லாத புகைப்படங்களைக் கொண்ட வாக்காளர்கள என 1,00,250 வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி ஆதாரங்களை வெளியிட்டு குற்றம் சாட்டினார். மேலும் 33,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற 25 மக்களவைத் தொகுதிகளால் மட்டுமே பிரதமர் மோடி அந்த பதவியில் இருக்கிறார் என்றும், இது வெறும் தேர்தல் முறைகேடு மட்டுமல்ல, இந்திய அரசியலமைப்பிற்கு எதிரான குற்றம் என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். 

ராகுல் காந்தி பகிர்ந்த வாக்காளர் பட்டியலின் விளக்கக்காட்சியில், ஒரே வாக்காளர் பல முறை இடம்பெற்றிருப்பதையும், பல மாநிலங்களில் ஒரே வாக்காளர் இருப்பதையும், வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி இல்லாமல் இருப்பதும், ஒரே முகவரில் ஏராளமான வாக்காளர்கள் இருப்பதும், வாக்காளர் அடையாளர் அட்டைகளில் அடையாளம் காண முடியாத அளவுக்கு மைரோசைஸ் செய்யப்பட்ட புகைப்படங்களும், முதல் முறையாக வாக்காளர்களுக்கான படிவம் 6ஐ தவறாக பயன்படுத்திருப்பதையும் காண முடிந்தது. நாட்டில் முதன் முறையாக தேர்தல் ஆணையம் இவ்வளவு பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தரவுகளுடன் ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் அதிர்வலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கு இந்தியா கூட்டணித் தலைவர்கள் தேர்தல் ஆணையத்துக்கும் பா.ஜ.கவுக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில் ராகுல் காந்தி தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும்,அந்த குற்றச்சாட்டுகளை உண்மை என்று அவர் நம்பினால் பிராமணத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், இல்லையென்றால் நாட்டு மக்களிடம் அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மற்றொருபுறம் வாக்காளர் பட்டியல் முறைகேடு புகார் தொடர்பாக  இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 300 எம்.பிக்களுடன் இன்று (10.08.2025) நாடாளுமன்றத்தில் இருந்து பேரணியாகச் சென்று தேர்தல் ஆணையர்களை சந்திக்க இருப்பதாக ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய தேர்தல் ஆணையத்தை பாஜக தனது வாக்குச் சாவடி மோசடி எந்திரமாக மாற்றிவிட்டது. பெங்களூருவின் மகாதேவபுராவில் நடந்தது நிர்வாகக் குறைபாடு அல்ல, மக்களின் தீர்ப்பைத் திருட திட்டமிட்ட சதி. எனது சகோதரரும்,  மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அளித்த, வாக்குத் திருட்டு தொடர்பான  ஆதாரம் இந்த மோசடியின் தீவிரத்தை (அளவை) அம்பலப்படுத்துகிறது. இன்று ராகுல்காந்தி அவர்கள் இந்தியா கூட்டணியின் எம்.பி.க்களை நாடாளுமன்ற வளாகத்திலிருந்து இந்திய தேர்தல் ஆணைய அலுவலகம் வரை பேரணியாக வழிநடத்துகிறார். இதனால் திமுக சார்பில் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.

Advertisment

ஒவ்வொரு மாநிலத்திற்கும் இயந்திரம் படிக்கக்கூடிய முழுமையான வாக்காளர் பட்டியலை உடனடியாக வெளியிடுதல் வேண்டும். வாக்காளர் பட்டியலில் அரசியல் ரீதியாக இயக்கப்படும் நீக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நமது ஜனநாயகத்தின் இந்த நாசவேலை குறித்து ஒரு தன்னாட்சியான விசாரணை வேண்டும். இந்தப் போராட்டத்தில் இந்தியா கூட்டணிக்கு திமுக தோளோடு தோள் நிற்கிறது. இந்தியாவின் ஜனநாயகத்தை பாஜக பட்டப்பகலில் கொள்ளையடிப்பதை நாங்கள் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். வாக்கு திருட்டை ராகுல் காந்தி அம்பலப்படுத்துகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.