டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிட்வா புயல் காரணமாக நமது அண்டை நாடான இலங்கை பேரழிவைச் சந்தித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தும் பல இடங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியும் இலங்கை மக்கள் அவதியுறுகின்றனர். இந்த இயற்கைச் சீற்றத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு. இலங்கை மக்களின் இப்பெருந்துயரில் தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் பங்கெடுக்கிறோம்.

Advertisment

இலங்கையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளை மீட்க அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு. இன்று காலை 11:05 மணியளவில் முதற்கட்டமாக 177 பேர் (ஆண்கள் 113, பெண்கள் 60 மற்றும் குழந்தைகள் - 4) தமிழ்நாட்டிற்குத் திரும்ப அழைத்துவரப்பட்டுள்ளனர். டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு ஒன்றிய அரசின் மூலம் உணவுப் பொருட்கள் மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவற்றைத் தந்து, அவர்கள் மீண்டெழுந்திட உதவிக்கரம் நீட்டிடத் தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. 

Advertisment

இதற்காக ஒன்றிய அரசுடன் இணைந்து செயல்பட அதிகாரிகள் குழுவை அமைத்திடத் தலைமைச் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டிட்வா புயலால் பாதிக்கப்படுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்கத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. இந்த இயற்கைச் சீற்றத்தால் உயிரிழந்த மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். துயருறும் அந்த மக்களுக்கு உணவுப் பொருட்கள் - மருந்துப் பொருட்கள் என ஒன்றிய அரசு மூலம் உதவிக்கரம் நீட்டிட அதிகாரிகள் குழுவை அமைக்கிறோம். அவர்கள் மீண்டெழுந்திடத் துணை நிற்போம்” ” எனத் தெரிவித்துள்ளார்.