2026 - 2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (17.02.2026) காலை 09:30 மணிக்கு கூடியது. அப்போது இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து வேளாண் இடைக்கால பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றினார். 

Advertisment

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பட்ஜெட் குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இதுதான் வளர்ச்சி. தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார் தங்கம் தென்னரசு. ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி, அவர்களது வஞ்சகங்களைத் திறமையாகக் கையாண்டு, வளர்ச்சியில் சாதனை படைத்திருக்கும் ஐந்தாண்டுகளை நிறைவு செய்கிறோம். 

Advertisment

ஜூலை மாதம் திராவிட மாடல் 2.0-வில் புதிய அறிவிப்புகளுடன் இன்னும் பிரமாண்டமான சாதனைகளுக்கு அடித்தளமிடும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வோம். திராவிட மாடல் அரசின் சாதனைகளில் சிலவற்றையும் - ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துவரும் ஓரவஞ்சனைகளில் சிலவற்றையும் உங்களின் பார்வைக்குப் பகிர்கிறேன். தமிழ்நாட்டுக்கு எதிராகத் தொடரும் ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைகள் : மக்கள் கடமை மாநில அரசிடம்; வரிவிதிக்கும் உரிமையோ ஒன்றிய அரசிடம். தமிழ்நாட்டுக்கு என்றால் சிறப்புத் திட்டங்கள் இல்லை. உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி இல்லை. பேரிடர் நிவாரணம் இல்லை. 

mks-modi-sitting
கோப்புப்படம்

ஒன்றிய அரசின் திட்டங்களுக்கும் சரியான நேரத்தில் நிதி விடுவிப்பதில்லை. வரிப் பகிர்வில் மாநிலங்களுக்கு 50% வேண்டுமென 16-ஆவது நிதிக்குழுவிடம் கேட்டோம்! கிடைக்கவில்லை. 9ஆவது நிதிக்குழுக் காலத்தில் 7.931% இருந்த தமிழ்நாட்டின் பங்கு தொடர்ந்து தேய்ந்துப் தேய்ந்து 4.079 ஆனது. இதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள இழப்பு  ரூ. 3.17 லட்சம் கோடி. அதாவது, மாநில அரசின் நிலுவைக் கடனில் 33%. 16ஆவது நிதிக்குழுவில், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகத்துக்குக் கூட முறையே 23.74% & 13.27% உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டுக்கு 0.44% என்ற சொற்ப அளவிலான உயர்வே கிட்டியிருக்கிறது. 

Advertisment

ஒன்றிய அரசு ஏற்படுத்தும் சவால்களால் நடப்பாண்டில் மட்டும் ரூ. 41,411 கோடி நிதிச்சுமையைத் தமிழ்நாடு தன் தலையில் ஏற்றுள்ளது. நாங்கள் உங்களிடம் பெருந்தன்மையை எதிர்பார்க்கவில்லை; குறைந்தபட்ச நியாயத்தையாவது வழங்குங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.