தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்-2025 இன் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (14.10.2025) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு உரை ஆற்றினார்.  அதில், “இந்த சமயத்தில், கலைஞர் சொன்ன ஒரு விஷயம் என்னுடைய ஞாபகத்திற்கு வருகிறது. நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, ஏராளமான பணிகளை, முன்னெடுப்புகளை நாள்தோறும் செய்வதைப் பார்த்து, ஒரு விழாவில் பேசிய முதலமைச்சர் (அப்போதைய) கலைஞர், என்னுடைய துறையில் செய்யப்பட்டு வந்த சாதனைகளை பட்டியலிட்டு பேசி, ‘நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது’ என்று சொன்னார். 

Advertisment

இன்றைக்கு அதே ஏக்கம் எனக்கும் வந்திருக்கிறது. நானே விளையாட்டுத் துறையையும் கவனித்திருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது. காரணம் உதயநிதியின் பணிகள் அப்படி இருக்கிறது. உதயநிதியின் பணிகள் இன்னும் இன்னும் சிறக்க வேண்டும். தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் இன்னும் இன்னும் வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று நான் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன். இங்கிருக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் நான் சொல்லிக்கொள்வது, உங்களுக்கான அத்தனை வாய்ப்புகளையும் நாங்கள் நிச்சயம் உருவாக்கித் தருவோம்.

Advertisment

நீங்கள் விளையாட்டில் கவனம் செலுத்தி முறையாக பயிற்சி செய்து, உங்கள் திறமையால் நம்முடைய தமிழ்நாட்டிற்கும், இந்திய நாட்டிற்கும் பெருமை சேருங்கள். உங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு முதலமைச்சராக நானும் இருக்கிறேன். உங்கள் துறையின் அமைச்சரான துணை முதலமைச்சர் உதயநிதியும் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் உங்கள் சாதனை பயணம் தொடர என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பேசினார்.