சென்னை, திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் முத்தமிழ்ப் பேரவையின் இசை விழா இன்று (15.12.2025) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கலந்து கொண்டு விருதாளர்களுக்கு விருதுகளை வழங்கி உரையாற்றினார். அப்போது அவர், “இசையுலகத்தின் முடிசூடா மன்னராக திகழ்ந்த ராஜரத்தினம் பிள்ளையின் பெயரால் அமைந்திருக்கக்கூடிய கலையரங்கத்தில் இந்த விழா நடைபெறுகிறது. அத்தகைய ராஜரத்தினம் பிள்ளை பெயரில் ராஜரத்னா விருது வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டவரேத கலைஞர் தான்.

Advertisment

அதேபோல, கலைத்துறையில் பெரும் சாதனைகளை படைத்த காரணத்தால், அவரை கலைஞர் என்று சொல்கிறோம், என்று கருத வேண்டிய அவசியம் இல்லை. கலைகளை, கலைஞர்களை மதித்த காரணத்தால்தான் அவர் கலைஞராக விளங்கினார். அத்தகைய கலைஞர் பெயரிலும் விருது வழங்க வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தேன். அந்த கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டு புரட்சித் தமிழன் சத்யராஜுக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டு திரைப்பட நாயகர் நாசருக்கு கலைஞர் விருது வழங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

Advertisment

 அவரே குறிப்பிட்டுச் சொன்னார். கனல் தெறிக்கக்கூடிய கலைஞருடைய வசனங்களை பேசி நடித்தவர் நாசர். அப்படி பேசி நடித்தவர்கள் சிலர். பிற்காலத்தில் அதை மறந்துவிடுவார்கள். சிலர் சொல்லிக்கொள்ள மாட்டார்கள். ஆனால், கலைஞரின் வசனங்களைத்தான் பேச்சுப் போட்டி, நாடகப் போட்டி. இப்படி போட்டிகளில் பங்கேற்று, உரையாற்றி பரிசு வாங்கினேன்" என்றும், 1984ஆம் ஆண்டு சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்து பல சினிமா கம்பெனிகளில், கலைஞரின் பராசக்தி வசனத்தை பேசித்தான் நடிகனாகும் வாய்ப்பு கிடைத்தது என்றும் பல மேடைகளில் சொன்னவர்  நாசர். நவரச நடிகர் மட்டுமல்ல. நன்றி மறவாத மனிதராகவும் நாசர் இருக்கிறார்” எனப் பேசினார். 

nasar-function

இவ்விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் த. வேலு, ஜெ. கருணாநிதி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், வாரியத் தலைவர்கள் பூச்சி எஸ். முருகன், துறைமுகம் காஜா, திண்டுக்கல் ஐ. லியோனி, முத்தமிழ்ப் பேரவையின் செயலாளர் பி. அமிர்தம், தலைவர் ஜி. ராமானுஜம், துணைத் தலைவர் குணாநிதி அமிர்தம், சீர்காழி கோ. சிவசிதம்பரம், முத்தமிழ்ப் பேரவை அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் விருதாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisment