திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (07.08.2025) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். 

அதன்பின்னர் அண்ணாசாலையில் இருந்து மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடம் வரை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி மேற்கொள்ள உள்ளனர். அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள கலைஞரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். 

இந்நிலையில் கலைஞர் நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கலைஞர் - முத்துவேலரும் அஞ்சுகம் அம்மையாரும் பூமிக்குத் தந்த பிறப்பு. தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு.  அவரது சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழ்நாட்டைக் காத்திட, முன்னேற்றிட உறுதியேற்று, கலைஞரின் ஒளியில் ‘எல்லார்க்கும் எல்லாம்’, ‘எதிலும் தமிழ்நாடு முதலிடம்’ எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.