சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் 31 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (03.10.2025) நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு வருகை தந்த மாணவ, மாணவியர்கள், பொதுமக்களுடன் கலந்துரையாடி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து கீழடியில் நடைபெற்று வரும் திறந்தவெளி அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின்போது அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர். பெரியகருப்பன், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், தமிழரசி, சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் கா. பொற்கொடி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலரும் உடனிருந்தனர். இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன். திறந்து வைத்த 30 மாதங்களில் 12 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது கீழடி அருங்காட்சியகம்.
வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோரும் தமிழரின் தொன்மை கவினுறக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது கண்டு வியப்பதை இன்று திடீர் ஆய்வுக்காக அங்குச் சென்றபோது அறிந்துகொண்டேன். கீழடி திறந்தவெளி அருங்காட்சியகமும் வரும் ஜனவரியில் திறக்கப்பட இருக்கிறது. பொருநை அருங்காட்சியகம் வரும் டிசம்பரிலேயே மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட உள்ளது. கங்கைகொண்ட சோழபுரத்தில் மற்றுமொரு அருங்காட்சியகம் எழுந்து வருகிறது. பூம்புகார் ஆழ்கடல் ஆய்வுகள் தொடங்கிவிட்டன. நிலத்திலும், நீரிலும், இலக்கியத்திலும் ஆய்ந்து, இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ்நிலத்திலிருந்து தொடங்கித்தான் எழுதப்பட வேண்டும் என்பதை உறுதிசெய்து வருகிறது திராவிட மாடல் அரசு” எனப் பதிவிட்டுள்ளார்.