சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரும், நவீன இந்தியாவின் சிற்பியுமான பண்டித ஜவஹர்லால் நேரு, குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தார். இதன் காரணமாக அவரது பிறந்த நாளான நவம்பர் 14ஆம் நாள் குழந்தைகள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழ்நாட்டின் குழந்தைகள் நலமாகப் பிறக்க மகப்பேறு நிதியுதவி, பிறந்ததும் வளமாக வளர ஊட்டச்சத்தை உறுதிசெய், வளர்ந்து பள்ளிக்குச் செல்லும் நிலையிலும் சத்தான உணவைப் பெறக் காலை உணவுத் திட்டம். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அன்புக்கரங்கள். உயர்கல்விக்கு உதவ நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
ஒட்டுமொத்த நலனை உறுதிசெய்யத் 'தமிழ்நாடு மாநிலக் குழந்தைகளுக்கான கொள்கை 2021' எனக் குழந்தைகளின் மீது தாயன்பு காட்டி, உங்கள் கனவுகளுக்கெல்லாம் துணைநிற்கும் திராவிட மாடல் அரசின் சார்பில் எனது குழந்தைகள் தின நல்வாழ்த்துகள். உங்களின் ஒவ்வொரு அடியிலும் உங்களுடன் நிற்பேன். நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன். உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன். உங்கள் அனைவரையும் பரந்த பார்வையும், பகுத்தறிவும் கொண்ட உலகக் குடிமக்களாக வளர்த்தெடுப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us