தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி தேசியக் கல்லூரியின் உடற்கல்வியியல் துறையில், உடற்கல்வி இயந்திரக் கற்றல் வழியாகப் பள்ளி மாணவர்களுக்கு திறன்மிகு கற்றல் என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வந்தார். இதனையடுத்து தனது ஆய்வறிக்கையை (THESIS) சமர்பித்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உயர்கல்வி, ஆராய்ச்சிக் கல்வி என்று தொடர்ந்து படியுங்கள். கற்றலுக்கு முடிவே கிடையாது" என எங்கள் திராவிடத் தலைமையாசிரியர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய அறிவுரை எனக்கும் பொருந்தும்.
அதன்படி, திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் உடற்கல்வியியல் துறையில் 2021ஆம் ஆண்டு முதல், ‘உடற்கல்வி இயந்திரக் கற்றல் வழியாகப் பள்ளி மாணவர்களுக்கு திறன்மிகு கற்றல் (Physical Activity for Skill Development Through Machine Learning)’ என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வந்தேன். அதன் வாய்மொழித் தேர்வு (17.11.2025) நடைபெற்றது. அதில் எனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டு ‘முனைவர்’ பட்டம் பெற்றுள்ளேன் என்பதைப் பெரு மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனை மேற்கோள்காட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தலைவர்கள் கற்றுக் கொள்ளும்போது, ​​தலைமுறைகள் பெரிய கனவுகளைக் காண்கின்றன (When leaders learn, generations dream bigger). என் நண்பனின் இடத்தில் இருந்து பெருமையுடன் மகிழ்கிறேன். முனைவர் பட்டம் பெற்றுள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வாழ்த்துகள். கல்வியே நமது உயர்வுக்கான வழி; அதிலும் ஆராய்ச்சிப் படிப்பு வரை நமது தமிழ்நாட்டு மாணவர்கள் முன்னேற வேண்டும் என்ற எனது சொல்லை, எனது அமைச்சரவையிலும் - குடும்பத்திலும் இருந்து கடைப்பிடித்திருக்கிறார் அன்பில் மகேஷ்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/18/anbil-mks-dmk-2025-11-18-08-33-16.jpg)
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், திமுக மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் திறம்படச் செயலாற்றிக் கொண்டே முனைவர் பட்டம் பெற்றுள்ள அவர், பணிச்சுமை - நேரமின்மை - வயது ஆகியவற்றைக் கடந்து கல்விபெறத் துடிக்கும் அனைவருக்கும் ரோல் மாடல் ஆகிவிட்டார்” எனக் குறிப்பிட்டுளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்குக் கிடைக்கும் எந்தவொரு பெருமைக்கும் காரணகர்த்தா எனது வழிகாட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான். என் மீது விழும் மலர்கள் என் தலைமையாசிரியர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இருந்து பெற்ற பாடத்தால் மலர்ந்தவையே. தந்தையின் இடத்தில் இருந்து உச்சி முகரும் எம் தலைமையாசிரியர் மு.க. ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us