சட்ட மாமேதை அம்பேத்கரின் 67வது நினைவு நாள் இன்று (06.12.2025) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு நாளில் (Mahaparinirvan Diwas) அவரை நினைவு கூர்கிறோம். அவரது தொலைநோக்குத் தலைமைத்துவமும், நீதி, சமத்துவம் மற்றும் அரசியலமைப்பு மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் நமது தேசிய பயணத்தைத் தொடர்ந்து வழிநடத்துகின்றன. 

Advertisment

மனித கண்ணியத்தை நிலைநிறுத்தவும் ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தவும் அவர் தலைமுறைகளை ஊக்கப்படுத்தினார். வளர்ந்த இந்தியாவை (Viksit Bharat) கட்டியெழுப்ப நாம் பாடுபடும் போது அவரது இலட்சியங்கள் நமது பாதையை ஒளிரச் செய்யட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புரட்டுகளைப் பொசுக்கிய புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள். எல்லா விதத்திலும் தன்னை அடக்கி ஒடுக்கும் ஓர் அமைப்புக்குள் இருந்து, கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர். 

Advertisment

அன்று அவரை அடக்க நினைத்த அதே ஆதிக்கக் கூட்டம் இன்று அவரைத் துதிப்பதுபோல நடிக்கிறதே, அதுதான் அவரது வெற்றி. அவரது வாழ்வே ஒரு பாடம். அவரது போராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம். அண்ணல் அம்பேத்கர் எனும் பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.