தனியார் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா நேற்று முன்தினம் (30.01.2026) பங்கேற்றார். அப்போது அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு திடிரென மேடையிலேயே மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு முதலுதவி அளித்தனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் உள்ள நிலையில் அவர் நலமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை பேசுகையில், “நானும் அவரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதுதான் அவருக்கு மயக்கம் வந்தது. நான் அங்கு தான் இருந்தேன். பின்னர் மருத்துவமனையில் சேர்த்தோம். நலமாக இருக்கிறார். அவர் பூரண நலம் அடைந்து வர வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். ஆரோக்கியத்தோடு மக்கள் பணியாற்ற அவர் திரும்பி வர வேண்டும் என்று நான் இறைவனை மனதார பிரார்த்திக்கிறேன்” என்றார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச். ராஜாவின் உடல்நலம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நேரடியாகச் சென்று அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்துள்ளார். அதாவது அவசர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யூ.) எச். ராஜா அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பதால், அவரது மகள்கள் இருவரிடமும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார். அப்போது, எச். ராஜா விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று அவரது குடும்பத்தினரிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Follow Us