தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளை திமுக, அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகள் தொடங்கியுள்ளன. அந்த வகையில் கூட்டணி கட்சிகளுடன் இன்று (22.02.2026) முதல் தொகுதி பங்கீட்டு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என திமுக ஏற்கெனவே அறிவித்திருந்தது.
அதன்படி கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைக்கப்பட்டது. அதாவது மக்களவை எம்.பி.யும், திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் உறுப்பினர்களாக திமுக முதன்மைச் செயலாளாரும், அமைச்சருமான கே.என். நேரு, திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும் அமைச்சருமான எ.வ. வேலு, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும் அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இத்தகைய சூழலில் தான் திமுக கூட்டணியில் முதல் கட்சியாக இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது. இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மைதீன் தலைமையில் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழுவும், திமுக சார்பில் அமைக்கப்பட்ட 7 பேர் கொண்ட குழுவும் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். மற்றொருபுறம் மனித நேய மக்கள் கட்சி, மதிமுகவுடன் நாளையும் (23.02.22026), பிப்ரவரி 26ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், பிப்ரவரி 27ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனும் திமுக தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த உள்ளது.
அதே சமயம் காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசனை நடத்துவதற்கான தேதி குறித்து அறிவிப்பு வெளியாக வில்லை. இத்தகைய சூழலில் தான் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை இன்று இரவு 8 மணியளவில் சந்தித்து பேச உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை திமுக தொடங்கியுள்ள நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேணுகோபால் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அப்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகளை கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் திமுக - காங்கிரஸ் கூட்டணிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Follow Us