தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சுற்றுப்பயணம், தேர்தல் பரப்புரை என தீவிரம் காட்டி வருகின்றனர். மற்றொருபுறம் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன. 

Advertisment

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், திமுக தலைமை அலுவலகமான சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், ‘உடன் பிறப்பே வா’ என்ற தலைப்பில் இன்று (06.11.2025) சந்தித்து ‘ஒன் டு ஒன்’ ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது ஒவ்வொரு தொகுதியிலும் திமுகவின் பலம், பலவீனம் குறித்தும் வேட்பாளர் தேர்வு தொடர்பாகவும், சட்டமன்ற தேர்தல் பணிகளை முடுக்கி விடும் வகையில் ஒன் டூ ஒன் ஆலோசனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. 

Advertisment

அதிலும் குறிப்பாகத் திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் திமுகவினர் வெற்றி பெறாவிட்டால் மாவட்டச் செயலாளர் உட்படக் கட்சி நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் எச்சரிக்கை விடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார். எனவே அந்த தொகுதியில். கூடுதல் கவனம் செலுத்தி உட்கட்சி மற்றும் கோஷ்டி பூசல்களைக் கலைந்து வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவை வெற்றி பெற வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  

ஒருவேளை  திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் திமுக தோல்வி அடைந்தால் மாவட்டச் செயலாளர் உட்படக் கட்சியின் அனைத்து நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்படும் என்றும் கடும் எச்சரிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களை தனித்தனியாகக் கேட்டறிந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் கட்சியை மேலும் பலப்படுத்தி அங்கு வெற்றி பெறுவதற்கான அனைத்து வியூகங்களையும் வகுக்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisment

எனவே இந்த 2 தொகுதிகளிலும் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றியைப் பெற வேண்டும் என்பதற்காக அங்கு மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளவரிடமும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்துக்களைக் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது. இதுவரை 37 சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.