தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாகக் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வரக்கூடிய நேரத்தில் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், காவிரிப்படுகை மாவட்டங்களிலும் மழை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisment

இந்நிலையில் சென்னை சீனிவாசபுரம் அருகில் உள்ள அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவார பகுதியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (24.10.2025) காலைநேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியினை விரைந்து முடித்திடுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  நீர்வளத்துறையைச் சேர்ந்த உதவி செயற் பொறியாளர்கள், செயற்பொறியாளார்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.  

Advertisment

முன்னதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், “தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது கடந்த 2 நாட்களாக நிலவி வந்தது. இதன் காரணமாக இன்று (24.10.2025) காலை 05:30 மணிக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகரக்கூடும். காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடற்கரையை ஒட்டி உருவாகி இருப்பதன் காரணமாக ஆந்திராவில் உள்ள பகுதிகளுக்கு அதிகப்படியான மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே சமயம் தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஓரிரு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.