வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணிகள் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக  திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக  அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்கும் அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் இன்று (02.11.2025) காலை 10.00 மணி அளவில் தொடங்கி மதியம் வரை நடைபெற்றது.

Advertisment

அதில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் தொடர்பாக திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின்  தொடக்க உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் எஸ்.ஐ.ஆருக்கு எதிரான தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர். இந்நிலையில் எஸ்.ஐ.ஆர். தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறித்து, ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் நோக்கோடு அவசரகதியில் மேற்கொள்ளப்படும் எஸ்.ஐ.ஆருக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை.

Advertisment

all-party-meeting-sir-pp

வாக்காளர் பட்டியல் திருத்தத்தைக் குழப்பங்கள் - ஐயங்கள் இல்லாமல் போதிய கால அவகாசத்துடன், 2026 பொதுத் தேர்தலுக்குப் பின்பு நடத்த வேண்டும் என்ற நமது கோரிக்கையை இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்காததால், உச்சநீதிமன்றத்தை நாட இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுத் தங்களுடைய உணர்வைப் பதிவு செய்த 49 கட்சிகளின் தலைவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கூட்டத்தில் பங்கேற்காதவர்களும் தங்களுடைய கட்சிகளில் எஸ்.ஐ.ஆர். குறித்து விவாதித்து, ஜனநாயகத்தைக் காத்திடும் முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.