தமிழர் திருநாளான பொங்கல் திருவிழாவின் போது, ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ என்ற மாபெரும் கலைவிழா கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த கலைவிழாவை திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி ஒருங்கிணைத்து வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டும் இந்த விழாவில் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து வழங்கும் மாபெரும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. 

Advertisment

இந்நிலையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பறை இசைத்து சென்னை சங்கமம் நிகழ்ச்சியை இன்று (14/01/2026) தொடங்கி வைத்தார்.  இதில் திமுக எம்.பி. கனிமொழி. அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சாமிநாதன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடக்க விழாவை அடுத்து, 'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகள் சென்னை, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 20 இடங்களில் ஜனவரி 15 முதல் 18 வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது. சென்னை சங்கமத்தில் முதன்முறையாக கோ-ஆப்டெக்ஸ் மற்றும் கலை பண்பாட்டுத்துறை இணைந்து நடத்தும் அலங்கார ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி ஜனவரி 17ஆம் நாள் சனிக்கிழமை காணும் பொங்கலன்று சென்னை அருங்காட்சியகத்தின் வளாகத்தில் தேசிய கலைக்கூடம் முன்புறம் மாலை 6.00 மணியளவில் நடைபெறுகிறது.

Advertisment

தமிழ்நாட்டின் புகழ் பெற்ற கலைஞர்கள் பத்மஸ்ரீ விருது பெற்ற பறை ஆசிரியர் பிரபா, அலங்காநல்லூர் வேலு ஆசான், சிலம்பம் ஐஸ்வர்யா மணிவண்ணன், கானா நடன இயக்குநர் அனுஷா விஸ்வநாதன், நடன கலைஞர்கள் காளி வீரபத்திரன் மற்றும் திருநங்கை பொன்னி, கரகக்கலைஞர்கள் கலைமாமணி தேன்மொழி இராஜேந்திரன் மற்றும் கோவை அனுஷா, பிரபல மக்கள் இசை பாடகிகள்-இசைவாணி மற்றும் சுகந்தி, பாடகர் ஜெயசித்தன், கானா-முத்து, காவடி ஆட்டக்கலைஞர் சுந்தரமூர்த்தி. காளை ஆட்டக்கலைஞர் இராஜன், கட்டை கூத்துக்கலைஞர் திலகவதி மற்றும் பலர் இந்த மரபார்ந்த உடைகளுக்கான அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பிக்கவுள்ளனர்.