தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சுற்றுப்பயணம், தேர்தல் பரப்புரை என தீவிரம் காட்டி வருகின்றனர். மற்றொருபுறம் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன. இந்நிலையில் உடுமலைப்பேட்டை மடத்துக்குளம் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், ‘உடன் பிறப்பே வா’ என்ற தலைப்பில் இன்று சந்தித்து ‘ஒன் டு ஒன்’ ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது ஒவ்வொரு தொகுதியிலும் திமுகவின் பலம், பலவீனம் குறித்தும் வேட்பாளர் தேர்வு தொடர்பாகவும், சட்டமன்ற தேர்தல் பணிகளை முடுக்கி விடும் வகையில் ஒன் டூ ஒன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. உடுமலைப்பேட்டை,மடத்துக்குளம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைப் பொறுத்த வரையில் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற தொகுதியாக உள்ளது. அதாவது உடுமலைப்பேட்டை தொகுதியில் முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணனும், மடத்துக்குளம் தொகுதியில், பொள்ளாச்சி தொகுதியின் முன்னாள் எம்.பி.யாக இருந்த மகேந்திரனும் வெற்றி பெற்றனர்.
எனவே இந்த 2 தொகுதிளிலும் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றியைப் பெற வேண்டும் என்பதற்காக அங்கு அமைச்சர் சக்கரபாணியை மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடமும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்துக்களைக் கேட்டறிந்தார். முன்னதாக கடந்த 29 நாட்களாக 64 சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் இன்று 30வது நாளாக ஒன் டூ ஒன் ஆலோசனை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/25/arivalayam-mks-2025-10-25-12-20-01.jpg)