தமிழ்த் திரைப்பட தயாரிப்பு உலகில் மிகவும் புகழ்பெற்றது ஏ.வி.எம். படத் தயாரிப்பு நிறுவனம். ஆவிச்சி மெய்ப்ப செட்டியார் என்பவரால் 1945ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தை ஏ.வி.எம். சரவணன் (வயது 86) நிர்வகித்து வந்தார். இத்தகைய சூழலில் தான் ஏ.வி.எம். சரவணன் வயது மூப்புக் காரணமாக இன்று (04.12.2025) அதிகாலை காலமானார். இதனையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காகக் காலை 7 மணி முதல் ஏ.வி.எம். ஸ்டுடியோவின் மூன்றாவது தளத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இவரது மறைவு தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க ஏ.வி.எம். நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவி.எம். சரவணன் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்த்திரையுலகின் பாதையைத் தீர்மானித்து உருவாக்கியதில் ஏ.வி.எம். நிறுவனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ - அதே அளவுக்கு ஏ.வி.எம். நிறுவனத்தின் பாதையைத் தீர்மானித்ததில் சரவணனுடைய பங்கும் அளப்பரியது.
புதல்வராகவும் - திரைத்துறை ஆளுமையாகவும் “அப்பச்சி” என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அவரது தந்தை மதிப்பிற்குரிய ஏ.வி.எம்.க்குப் புகழ் சேர்த்தவர் சரவணன். பேரறிஞர் அண்ணாவின் “ஓர் இரவு”, கலைஞரின் “பராசக்தி”, முரசொலி மாறனின் “குலதெய்வம்” என ஏவி.எம். நிறுவனத்துக்கும் திராவிட இயக்கத்தின் திரைப்பயணத்துக்கும் நெடிய தொடர்புண்டு. அந்த பந்தம் குடும்பப் பாசமாகி, எங்கள் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவர் ஏ.வி.எம்.சரவணன்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/04/avm-saravanan-2025-12-04-09-49-58.jpg)
கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் ஏ.வி.எம்-மின் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை நான் பார்வையிடச் சென்றபோது, அந்த நினைவலைகளைப் பகிர்ந்து பாசமுடன் பழகினார். அமைதியும் எளிமையுமே பண்புநலமாகக் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுகப் பழகிய அவரது மறைவால் வாடும் ஏவி.எம் குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவரது இறுதி மரியாதைக்குப் பிறகு இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஏ.வி.எம். மாயானதில் அவரது உடல் தகனம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் சம்சாரம் அது மின்சாரம், மின்சார கனவு என பல்வேறு வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் ஆவார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். நேற்று (03.12.2025) தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் இன்று காலை அவர் காலமானது திரைப்படத்துறையில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/04/avm-saravanan-mks-2025-12-04-09-49-24.jpg)