நடிகர் ரோபோ சங்கர் (வயது 46) உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி இன்று (18.09.2025) இரவு 08:30 மணியளவில் உயிரிழந்தார். முன்னதாக மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுத் தொடர்ந்து  சிகிச்சை பெற்று வந்தார்.

Advertisment

ரோபோ சங்கரின் உடல் இன்று இரவு அவரது வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை (19.09.2025) இறுதி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. மறைந்த ரோபோ சங்கர் தீபாவளி என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஆவார். அதனைத் தொடர்ந்து நடிகர் அஜித், தனுசு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துத் தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றிருந்தார். 

இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரோபோ சங்கர் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “திரைக்கலைஞர் ரோபோ சங்கர் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன். மேடைகளில் துவங்கி, சின்னதிரை, வண்ணத்திரை என விரிந்து, தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவர் ரோபோ சங்கர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.