விழுப்புரம் மாவட்டம் சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை அய்யூர் அகரம் பாலம் அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். அதோடு நிதியுதவியையும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சென்னையில் இன்று (20.9.2025) நடைபெற்ற ஆசிரியர்களுக்கான நுழைவுநிலைப் பயிற்சியில் கலந்துகொள்வதற்காக நான்கு அரசுப் பள்ளி ஆசிரியைகள் தங்கள் கணவர்களுடன் சென்னைக்கு காரில் சென்றுகொண்டிருந்தனர். 

Advertisment

அப்போது அவர்களில் ஒருவரான சிவரஞ்சனி (வயது 38) (கனவர் பெயர் : ஜெகதீசன்), மற்றொரு ஆசிரியை மெஹருன்னிஷாவின் கணவர் ஷாகுல் அமீது ஆகிய இருவரும் அதிகாலை சுமார் 05.00 மணியளவில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அய்யூர் அகரம் பாலம் அருகில் எதிர்பாராதவிதமாக எதிரே வந்த டேங்கர் லாரி ஒன்றின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மேலும், இந்த விபத்தில் காயமடைந்து முண்டியம்பாக்கம் அரசு விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மெஹருன்னிஷா, பூவிழி, கௌசல்யா, பிரகாஷ், முருகன் மற்றும் சூரியா ஆகிய ஆறு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். 

குடும்பத்தினருக்கும் இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.