பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியைத் தேசிய ஜனநாயக கூட்டணி தக்கவைத்து கொண்டது. அதாவது 101 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க. 89 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதே போன்று 101 தொகுதிகளில் போட்டியிட்ட ஜே.டி.யூ.  85 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதே சமயம் 141 தொகுதிகளில் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

Advertisment

அதோடு 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பீகார் தேர்தல் அனைவருக்குமான பாடம் ஆகும். அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர் நிதிஷ்குமாரின் தீர்க்கமான வெற்றிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் அவர் நலம் பெற வாழ்த்துகிறேன். இளம் தலைவர் தேஜஸ்வி யாதவின் அயராத பிரச்சாரத்திற்காகவும் அவரை பாராட்டுகிறேன். 

Advertisment

நலத்திட்ட உதவிகள், சமூக மற்றும் சித்தாந்த கூட்டணிகள், தெளிவான அரசியல் செய்தி மற்றும் இறுதி வாக்கு எண்ணப்படும் வரை அர்ப்பணிப்புடன் கூடிய மேலாண்மை ஆகியவை தேர்தல் முடிவுகளை பிரதிபலிக்கின்றன. இந்தியா கூட்டணியின் தலைவர்கள், செய்தியைப் படித்து, வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள மூலோபாய ரீதியாக திட்டமிடும் திறன் கொண்ட அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் ஆவர். இந்தத் தேர்தல் முடிவு தேர்தல் ஆணையத்தின் (ECI) தவறுகளையும், பொறுப்பற்ற செயல்களையும் மறைத்துவிடாது. தேர்தல்_ஆணையத்தின் நற்பெயர் தாழ்ந்த நிலையில் உள்ளது. இந்நாட்டு மக்கள் வலிமையான, நடுநிலையான தேர்தல் ஆணையத்தை எதிர்பார்க்கின்றனர்; தோற்றவர்களிடமும் நம்பிக்கை ஊட்டும் வகையில் தேர்தலை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.