தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய அரசுக்கு 10 கேள்விகளை எழுப்பியிருந்தார். அதில், “மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் ஜி.எஸ்.டி (GST) சீர்திருத்தம் - கூட்டுறவு கூட்டாட்சி (COOPERATIVE FEDERALISM) என்பது வெற்று முழக்கமா?. புதிய கல்விக் கொள்கை (NEP) இந்தியை திணித்து தமிழ்நாட்டு குழந்தைகள் கல்வியை சிதைப்பது மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லையா?. உத்தரப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிராவுக்கு அளிக்கப்படும் சாலை திட்டங்களை தமிழ்நாட்டிற்கு தராதது ஏன்?. புதிய ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தென்னக ரயில்வேவுக்கு மட்டும் ஏன் பாரபட்சம்?.
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி தர ஏன் இவ்வளவு தாமதம்?. தமிழ்நாடு அரசின் நிதியில் கட்டப்படும் வீடுகளில் பிரதமர் பெயர் எதற்கு?. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு வழங்க வேண்டிய நிதி ரூ.975 கோடி நிதி எங்கே?. ஓய்வூதிய திட்டத்திற்கு வெறும் ரூ.200 தருகிறீர்கள். ஆனால் தமிழ்நாடு அரசு ரூ.1,200 வழங்குகிறது. ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய ரூ.3,709 கோடி நிதி ஏன் இன்னும் விடுவிக்கப்படவில்லை?. நாட்டின் மக்கள் தொகையில் தமிழ்நாடு 6%, ஆனால், 4% மட்டும் நிதிப் பகிர்வு அளிப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த கேள்விகளை குறிப்பிட்டு அவரும் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களின் நெஞ்சங்களிலும் ஏராளமான கேள்விகள் நிரம்பியுள்ளன. அவற்றில் சிலவற்றை நான் கேட்கிறேன்: ஊழல்வாதிகள் பா.ஜ.க.வின் கூட்டணிக்கு வந்தபின்பு, வாசிங் மிசினில் (Washing Machine) வெளுப்பது எப்படி?. நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம்?.
ஒன்றிய அமைச்சர்களே நம் குழந்தைகளை அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கைகளைச் சொல்லி மட்டுப்படுத்துவது ஏன்?. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்?. பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிக்காக, மக்களின் வாக்குகளைப் பறிக்கும் வாக்குத் திருட்டை எஸ்.ஐ.ஆர். (S.I.R) ஆதரிப்பது ஏன்?. இரும்பின் தொன்மை குறித்து அறிவியல்பூர்வமாகத் தமிழ்நாடு மெய்ப்பித்த அறிக்கையைக்கூட அங்கீகரிக்க மனம்வராதது ஏன்?. கீழடி அறிக்கையைத் தடுக்கக் குட்டிக்கரணங்கள் போடுவது ஏன்?. இதற்கெல்லாம் பதில் வருமா?. இல்லை வழக்கம்போல, வாட்சப் யூனிவர்சிட்டியில் பொய்ப் பிரசாரத்தைத் தொடங்குவீர்களா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.