திருவள்ளூர் மாவட்டம், போளிவாக்கம் ஊராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அரசு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில், தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கும் விரிவுப்படுத்தி முதல்வர் மு.க. ஸ்டாலின தொடங்கி வைத்தார்.  அதோடு, தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத் திட்டத்திற்காக உணவு கொண்டு செல்லும் வாகனங்களின் சேவைகளையும் தொடங்கி வைத்தார்.

Advertisment

மேலும் வெப்பக் காப்புப் பையில் (Insulated Thermal Carrying Bag) வைக்கப்பட்ட உணவுக் கலன்களை தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். இதனையடுத்து தூய்மைப் பணியாளர்கள் தங்களது நன்றியை மு.க. ஸ்டாலினுக்கு தெரிவித்துக் கொண்டனர். இந்நிலையில் இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவிலேயே முதன்முறையாகத் தூய்மைப் பணியாளர்களின் பசி போக்கும் திட்டம். 2025 நவம்பரில் சென்னை மாநகராட்சியில் 29 ஆயிரத்து 455 பணியாளர்கள் பயன்பெறத் தொடங்கப்பட்ட இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் காண்கிறது.

Advertisment

மீதமுள்ள, 24 மாநகராட்சிகளில் 48 ஆயிரத்து 768 பேர், 145 நகராட்சிகளில் 29 ஆயிரத்து 556 பேர்,  479 பேரூராட்சிகளில் 21 ஆயிரத்து 910 பேர் என மொத்தம் 1 லட்சத்து 29 ஆயிரத்து 689 தூய்மைப் பணியாளர்களுக்கும் அவர்களது பணிவேளையில் உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன். தூய்மைப் பணியாளர்களுக்கு வீடு, தொழில் முனைவோராகக் கடனுதவி, ஆயுள் காப்பீடு, அவர்களது குழந்தைகளுக்கு உயர்கல்வி உதவித்தொகை என அவர்களின் ஒட்டுமொத்த உயர்வுக்காகப் பாடுபடுவதுதான் திராவிட மாடல் அரசு. இன்னும் பல நலத்திட்டங்களைச் செய்து தருவோம். என்றும் தூய்மைப் பணியாளர்களுக்குத் துணையாக இருப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.