சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், அனஞ்சையூர் கிராமத்தில் சாலை விபத்து ஒன்று நிகழ்ந்தது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். அதோடு நிதியுதவியையும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், சிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரசாத் (வயது 25) என்பவர் தனது மனைவி சத்யா (வயது 20) மகன் அஸ்வந்த் (வயது 3) மற்றும் அவரது உறவினர் சோனேஸ்வரி ஆவார். 

Advertisment

இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் (11.11.2025) இரவு சுமார் 07.20 மணியளவில் சிகவங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், அனஞ்சையூர் கிராமத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கு ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மதுரையிலிருந்து சிவகங்கை நோக்கிச் சென்ற காவல்துறை வாகனமும், இருசக்கர வாகனமும் பூவந்தி - சக்குடி மதுரை தேசிய நெடுஞ்சாலை செல்லும் சாலையில் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த பிரசாத் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவரது மனைவி சத்யா மற்றும் மகன் அஸ்வந்த் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக திருப்புவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். 

Advertisment

இந்த துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சோனேஸ்வரி என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.அதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.