சிதம்பரம் அண்ணாமலை நகரில், திருவேட்களத்தில் அமைந்துள்ள பாசுபதேஸ்வரர் கோயில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. திருநாவுக்கரசர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரப் பாடல்கள் பெற்ற இந்தத் தலம், சோழ நாட்டில் காவிரி வடகரையில் உள்ள தலங்களில் இரண்டாவது சிவத்தலமாகும். இந்தக் கோயிலை இந்து சமய அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது.
பழமையான இந்தக் கோயிலைச் சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என்று வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதன் அடிப்படையில், ரூ.1.07 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.கோயில் சீரமைப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி மூலம் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, பாசுபதேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அண்ணாமலை நகர் பேரூராட்சித் தலைவர் பழனி குத்துவிளக்கு ஏற்றி வரவேற்றார்.
கோயில் அறங்காவலர் பெத்த பெருமாள், கோயில் ஆய்வாளர் சீனிவாசன், பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி, கவுன்சிலர் அன்பரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.அதேபோல், சிதம்பரம் அருகே தாண்டவராயன் சோழகன் பேட்டை கிராமத்தில், ரூ.5.30 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறைக் கட்டிடத்தை, தமிழக முதலமைச்சர் காணொளி மூலம் திறந்து வைத்தார்.