கோயம்புத்தூரில் கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர், செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பினைச் செயல்படுத்திடும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 18.12.2023 அன்று கோவையில் செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் அதற்கான பணிகளைத் தொடங்கி வைத்தார். 

Advertisment

அதன்படி அப்பணிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காகப் பூங்காவை இன்று (25.11.2025)  திறந்து வைக்க உள்ளார். இந்த பூங்கா உலகத்தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் 45 ஏக்கர் பரப்பளவில், ரூ.208.50 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வுப் பணிகளுக்காக 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன் ஒரு பகுதியாக தொழில்துறை சார்பில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் இன்று மாலையில் நடைபெறும் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க உள்ளார். 

Advertisment

இதனையடுத்து நாளை (26.11.2025) காலை ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில் மாவீரன் பொல்லானின் உருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தினை திறந்து வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து தீரன் சின்னமலை மணிமண்டபம் சென்று, அவரது உருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்ய உள்ளார்.  மேலும்,  சோலார் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.605 கோடியில் முடிவுற்றப் பணிகளைத் தொடங்கிவைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 1,84,491 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். அன்று மாலையில், சித்தோடு ஆவின் பால்பண்ணை வளாகத்தில் பால்வளத் தந்தை பரமசிவனின் உருவச் சிலையைத் திறந்து வைக்க உள்ளார்.