கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் கடந்த 5-ம் தேதி லால்கான் தெருவில் உள்ள நவாப் பள்ளிவாசலில், சிதம்பரம் ஜவகர் தெருவைச் சேர்ந்த ஹரிப் மகன் முகமது இஸ்மாயில் (45) என்பவர், தனது ஆதரவாளர்களுடன் பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் பள்ளிவாசலின் கணக்கு விவரங்கள் மற்றும் சொத்து விவரங்களைக் கேட்டுள்ளார். அப்போது, அங்கிருந்தவர்களுக்கும் முகமது இஸ்மாயில் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து முகமது இஸ்மாயில் (45) சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், செல்லப்பா என்கிற ஜியாவுதீன், மஜீத், முகமது உசேன், ஈசாக், பக்ருதீன், பினாயில் ஆரிஃப், சையது, யூசுப் ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதேபோல், சிதம்பரம் லால்கான் தெருவைச் சேர்ந்த முகமது உசேன் (51) அளித்த புகாரின் பேரில், சாகுல் ஹமீது, நகிப், சபீர், ஜமால் உசேன், பைரோஸ், நாசர், ஹசன், ஹரிப், தசீர் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிதம்பரத்தில் இஸ்லாமியர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இரு தரப்பினரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு, இரு தரப்பினரும் அரை மணி நேர இடைவெளியில் சிதம்பரம் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முகமது இஸ்மாயில் தரப்புக்கு ஆதரவாக, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் முகமது நுமான் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், லால்கான் பள்ளிவாசல் நிர்வாகிகளைக் கண்டித்தும், அவர்களைக் கைது செய்யக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல், சிதம்பரம் லால்கான் பள்ளிவாசலைச் சேர்ந்த செல்லப்பா என்கிற ஜியாவுதீன் தலைமையில், நிர்வாகிகளான ஹலீம், முகமது அலி, மக்கின் உள்ளிட்டோர் சேர்ந்து, நவாப் பள்ளிவாசல் நிர்வாகிகளைக் கண்டித்தும், அவர்களைக் கைது செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சிதம்பரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.