ரயிலில் இருந்து மூன்று வயது குழந்தையை கீழே இறக்கி விட்ட மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கிச் செல்லக்கூடிய மின்சார ரயில் இன்று அதிகாலை 3 மணியளவில் தாம்பரம் சானிட்டோரியம் ரயில் நிலைய நடைமேடையில் நின்றுகொண்டிருந்தது. அப்போது ரயிலில் இருந்த மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை ஒன்றை மர்ம நபர் ஒருவர் பிளாட்பாரத்தில் இறக்கி விட்டார். அதனைத் தொடர்ந்து ரயிலானது அங்கிருந்து சென்றது.
இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். ரயில்வே போலீசார் குழந்தையிடம் தாய், தந்தை, ஊர் குறித்து விசாரித்த போது குழந்தைக்கு எதுவும் தெரியாததால் குழந்தைகள் நல அலுவலகத்தில் ஒப்படைத்தனர். ரயில் நிலையத்தில் கிடைப்பெற்ற சிசிடிவி காட்சியை வைத்து ரயிலில் இருந்து குழந்தையை கீழே இறங்கிவிட்டது யார் என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.