வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டை பவளக்கார தெருவை சேர்ந்தவர் வேணு (வயது 33). இவர் ஐ.டி. துறையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜனனி ஆவார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் யோகேஷ் என்ற ஒரே ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தனியார் முன் மழலையர் பள்ளியில் (pre kg) படித்து வரும் தனது குழந்தையை தந்தை வேணு பள்ளி முடிந்து வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது அங்கு வீட்டு வாசலில் காரில் காத்துக்கொண்டிருந்த நபர்கள் வேணு மீது மிளகாய் பொடி தூவி குழந்தை கடத்தி சென்றனர்.
இது குறித்து கிடைத்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்தும், 7 தனிப்படைகள் அமைத்தும் காவல் துறை விசாரணையை துரிதப்படுத்தியது. அதன் பின்னர் 2 மணி நேரம் கழித்து குழந்தை மாதனூர் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரம் இருப்பதாக தகவல் தெரிந்து தனிப்படை காவல் துறையினரால் குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது. இந்நிலையில் காமாட்சியம்மன் பேட்டை அதே பவளக்கார தெருவை சேர்ந்த பாலாஜி என்பவரை காவல் துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டது, அப்போது குழந்தையின் தந்தை வேணுவின் தங்கை சில ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார். இதற்கு தற்போது கைதான பாலாஜி உதவியதாக கூறி இரு வீட்டாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதே சமயம் அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக ஓட்டுனராக பணியாற்றி வரும் பாலாஜி வாடகைக்கு கார் ஓட்டும் வேலையையும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் காரை ஓட்டுச்செல்லும் போது சென்னை சுங்குவார்சத்திரம் அருகே விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 8 லட்சம் செலவு ஆனதாகவும் இதில் 4 லட்சத்தை இன்சூரன்ஸ் மூலம் பெறப்பட்ட நிலையில் மீதம் உள்ள 4 லட்சத்தை விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் பாலாஜி தான் தர வேண்டும் என கார் உரிமையாளர் பாலாஜிக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏறகனவே இருந்த முன் விரோதம் மற்றும் வசதியான குடும்பம் என்பதால் 4 லட்சம் பணம் கேட்டு குழந்தையை கடத்த திட்டம் தீட்டி தனது கூட்டாளி விக்ரம் என்பரோடு சேர்ந்து குழந்தையை கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் போலீயான கர்நாடக பதிவு எண் கொண்ட காரில் குழந்தையை கடத்திக்கொண்டு மாதனூரை கடக்கும் போது, குழந்தை கடத்தல் செய்தி அனைத்து ஊடகத்திலும் வருவதை அறிந்தும், காவல் துறை தீவிரம் காட்டுவதையும் அறிந்து குழந்தையை மாதனூர் அருகே பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரம் விட்டுச்சென்றுள்ளார். அதோடு ஒன்றும் தெரியாதது போல், குழந்தையின் தந்தை, நண்பர்களுக்கு போன் பண்ணி "குழந்தை மாதனூர் அருகே இருப்பதாக எனக்கு தகவல் வந்ததாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்தே காவல் துறையினர் குழந்தையை பெற்றோரோடு சென்று மீட்டுள்ளனர்.
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து, தலைமறைவாக உள்ள பாலாஜியின் கூட்டளி விக்ரம் என்பவரையும் காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் குடியாத்தம் அடுத்த கூட நகரம் பார்வையாபுரம் கிராமத்தை சேர்ந்த விக்கி என்கிற விக்கிரமன் (வயது 27) சிறுவன் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை நடைப்பெற்று வருகிறது. இவர், குழந்தையை கடத்திச்சென்ற கார் ஓட்டுனராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.