Tamilnadu CM Mk Stalin
தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இது போன்ற சூழலில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். இதற்கிடையே கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிகழ்வுகளும், மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது, தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்களும் தற்போது அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 400 பேர் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து உரிய அனுமதிச் சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அதன்படி கச்சத்தீவு அருகே உள்ள வடக்கு மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 8 பேரைச் சுற்றிவளைத்து விசைப் படகுடன் கைது செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்கள் 8 பேரும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதியைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படட் மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், ‘இலங்கை கடற்படையினரால் இன்று (09.08.2025) இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு இந்திய மீனவர்கள் அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுடன் சிறைபிடிக்கப்பட்ட மற்றொரு துயரமான சம்பவத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கு கடலை நம்பியே உயிர்வாழ்ந்து வரும் நிலையில் தற்போது சிறை வாசத்தின் அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். மீனவர்கள் நீண்டகாலமாக சிறையில் வைக்கப்பபடுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, அவர்களின் குடும்பங்களுக்கு கடுமையான மன உளைச்சலையும் நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தை திறம்படக் கையாண்டு, கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட இந்திய அரசு உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.