தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலீட்டை ஈர்க்கும் நோக்கில் 8 நாள் பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து சென்றார். ஜெர்மனியில் பல நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, பயணத்தை முடித்துக்கொண்டு லண்டனுக்கு சென்றார். அங்கு தமிழர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் உருவப்படத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “பழமைவாதங்களும் பிற்போக்குத்தனங்களும் நிறைந்திருக்கும் சமூகத்தில், அறிவார்ந்த உரையாடல்களை நிகழ்த்தி, மக்களுக்கு விழிப்புணர்வூட்டி, தலைநிமிரச் செய்து, அவர்களது நம்பிக்கையை வாக்குகளாகப் பெற்று, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் தமிழ்நாடு உயர்ந்திருப்பதற்கான அடித்தளம், அறிவாசான் தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம்!
ஆயிரம் ஆண்டுகளாக அறிவார்ந்த பலரின் கனவாக இருக்கும் ஆக்ஸ்போர்டு அறிவாலயத்தில், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் கனவாக எழுந்த சுயமரியாதை இயக்கத்தையும் புரட்சியாளர் பெரியாரையும் போற்றினேன். சமத்துவம் போற்றுவோம்! பெரியாரியம் பழகுவோம்! பெரியாரின் பேரொளி உலகுக்கு வழிகாட்டட்டும்” என்றார்.