தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் 2025 ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 8 வரை 8 நாள் பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து சென்றார். ஜெர்மனியில் பல முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதன் மூலம், அந்நிறுவனங்கள் சுமார் ரூ.7,020 கோடி மதிப்பில் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. இதைத் தொடர்ந்து, ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் இங்கிலாந்து சென்றார், அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, லண்டனில் உள்ள தொழில் நிறுவனங்களுடன் முதல்வர் ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார். ஜெர்மனியில் ரூ.7,020 கோடியும், இங்கிலாந்தில் ரூ.8,496 கோடியும் என மொத்தம் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பவுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ஜெர்மனியில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்புடன் தொடங்கிய பயணம், இலண்டன் மாநகரில், அவர்கள் வாழ்த்தி வழியனுப்ப நிறைவுறுகிறது. அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன். இத்தனை நாளும் தங்கள் சகோதரனாய் என்னை கவனித்துக்கொண்ட தமிழ் சொந்தங்களுக்கு என் அன்பை நன்றியாய் நவில்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.