தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெர்மனியில், கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை நூலகத்தை அவர் பார்வையிட்டார். இந்தப் பயணத்தின் மூலம் 6,250 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 3,201 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. குறிப்பாக, ரயில் கதவுகள் மற்றும் பிரேக்குகள் தயாரிக்கும் நார்-ப்ரீம்ஸ் நிறுவனம் 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாகவும், இதன் மூலம் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

ஜெர்மனி பயணத்தை முடித்த பின்னர், முதலமைச்சர் ஸ்டாலின் இங்கிலாந்து சென்றடைந்தார். அங்கு விமான நிலையத்தில் இங்கிலாந்து வாழ் தமிழர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். பலர் முதலமைச்சருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இன்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்கிறார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பதிவில், “இங்கிலாந்தில் கால் வைத்தவுடன் தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டேன். கடல் கடந்த இந்தப் பயணத்தில் வீட்டின் நறுமணத்தை உணர்ந்தேன். உற்சாக வரவேற்பால் உள்ளம் மகிழ்ந்தேன்,” என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.