தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: உங்க விஜய் நான் வரேன்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வார சனிக்கிழமைகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் முன்னிலையில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, மூன்றாவது கட்டமாக விஜய் இன்று (27-09-25) நாமக்கல் கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பை நடத்தினார். நாமக்கல்லில் பரப்புரையை முடித்துக் கொண்டு பிரச்சார வாகனத்தில் சாலை மார்க்கமாக விஜய், கரூருக்குச் சென்றார். அப்போது அவருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

Advertisment

இந்த கூட்டத்தில், அதிமான மக்கள் கூடியதால் கடும் நெரிசல் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் மயக்கமடைந்துள்ளனர். விஜய் பேசிவிட்டு அங்கிருந்து சென்ற பின்பு, கூட்டம் கலைந்த போது தான் குழந்தைகள், பெண்கள் என 20க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்திருந்தது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பரப்புரையில் பங்கேற்ற 29 பேர் உயிரிழந்ததாகவும் 2 குழந்தைகள் உள்பட 10க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisment

இந்த தகவலை அறிந்த செந்தில் பாலாஜி, உடனடியாக அரசு மருத்துவமனைக்கு விரைந்து சிகிச்சைப் பெறுபவர்களிடம் பேசி வருகிறார். இதனிடையே, கரூரில் மருத்துவமனையை தயார் நிலையை வைத்திருக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதால் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், அன்பில் மகேஸ் ஆகியோர் கரூருக்கு விரைந்துள்ளனர். மேலும், சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்தும் அரசு மருத்துவமனைக்கு கரூருக்கு விரைந்துள்ளனர். இதனிடையே, கூட்டத்தில் மயங்கி விழுந்தவர்களை தூக்கிச்செல்ல ஆம்புலன்ஸ்கள் வந்த வண்ணம் உள்ளதால் கரூர் அரசு மருத்துவமனையில் பதற்றம் நிலவி வருகிறது. மேலும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்கள் ஒவ்வொருவராக உயிரிழந்து வருவதாக வெளியாகும் தகவலால் கரூர் மாவட்டமே கூக்குரலாக இருக்கிறது.

இந்த நிலையில், கரூரில் இருந்து வரும் செய்திகள் கவலையளிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் சுப்பிரமணியம் ஆகியோரையும், மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன். அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம்  போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ஏடிஜிபியிடமும் பேசியிருக்கிறேன். பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Advertisment