சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், ‘தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும்’ என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்று இன்று (06-03-26) நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “மக்களிடம் செல், மக்களிடம் வாழ், மக்களிடமிருந்து கற்றுக்கொள் என்று பேரறிஞர் அண்ணாவின் அறிவுரையின் அடிப்படையில் தமிழ்நாட்டின் ஒரு கோடி 80 லட்சம் குடும்பங்களிடம் நேரடியாக சென்று அவர்களுடைய கனவுகளை, அவர்களுடைய தேவைகளை, அவர்களுடைய எதிர்பார்ப்புகளை கேட்டறிந்தோம். மக்கள் சொன்ன கருத்துக்கள் அடிப்படையாக வைத்து அதில் முக்கியமானவற்றை எல்லாம் முன்னிலைப்படுத்தி தமிழ்நாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வை அதாவது தமிழ்நாடு 2030, 14 முக்கிய அம்சங்களை என் மக்களுக்கு நான் அறிவிக்க விரும்புகிறேன். முதல் துறை, வீட்டு வசதி துறை. நம் கனவு, நம் வீடு, நம் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் இருக்கிற ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு முகவரி இருக்க வேண்டும். ஒவ்வொரு முகவரியும் ஒரு இனிய இல்லமாக திகழ வேண்டும். 2030 ஆம் ஆண்டிற்குள் கிராமப்புறங்களில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 5 லட்சம் வீடுகளும், நகர்புறங்களில் இரண்டு லட்சம் வீடுகளும் கட்டி தேவைப்படும் ஒவ்வொரு குடும்பத்தின் கைகளிலும் சாவியை ஒப்படைப்போம். இரண்டாவது துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை. நலமுடன் தமிழ்நாடு 2030, தேவைப்படும் அனைவருக்கும் போதிய மருத்துவ காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல் நீரழிவு, உயரத்த அழுத்தம், புற்றுநோய் போன்றவற்றை கண்டறிய ஆரம்ப நிலையில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மனநல ஆலோசனை மையம் அமைக்கப்படும்.
அடுத்து மூன்றாவது துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை. வேளாண்மை செழிப்பின் கண்ணியத்தின் வளர்ச்சியின் அடையாளம். நிகர சாகுபடி பரப்பு 50 லட்சம் ஹெக்டராக உயர்த்தப்படும். மண்டல அட்டைகள் 43 லட்சம் உழவர்களுக்கு வழங்கப்பட்டு, இயற்கை விவசாயம் 17,000 ஹெக்டராகவும், உயிர் வேளாண்மை 1 லட்சம் ஹெக்டராகவும் விரிவுபடுத்தப்படும். வேளாண்மைக்கு ஆதாரமான நீரை சேமிக்க நுண்ணீர் பாசனம் 21 லட்சம் ஹெக்டராக விரிவுபடுத்தப்படும். மேற்கு கிழக்கு தொடர்ச்சி மலைகளில் 1000 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டப்படும். கால்வாய் மதகுகள் புணரமைக்கப்பட்டு, நீர் மேலாண்மையை சீர் செய்து தண்ணீர் தட்டுப்பாடான பகுதிகள் பலமான பகுதிகளாக மாற்றப்படும். உணவு உற்பத்தி 125 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டு ஆயிரம் மதிப்பு கூட்டல் பையங்கள் நிறுவப்பட்டு ஒரு லட்சத்தி 25ஆயிரம் உழவர்களுக்கு வேளான் கருவிகள் வழங்கப்படும். நான்காவது துறை, பள்ளி கல்வித்துறை. ஒவ்வொரு பள்ளியும் அறிவின் ஆலயமாக இருக்கிறது. இடைநிற்றல் இல்லா கல்விக்கனவு 2030 இதன் மூலம் ஒவ்வொரு குழந்தையும் பள்ளியில் சேர்ந்து வெற்றியுடன் வெளியேறும் நிலையை உருவாக்குவோம். அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறக்கூடிய பள்ளிகளில் 2030க்குள் 100 விழுக்காடு ஸ்மார்ட் கிளாஸ்ரூம் அமைக்கப்படும். 300க்கும் மேற்பட்ட நூலகங்கள், லைப்ரரி 5.0 என்ற புரட்சிகர நவீன அறிவு கோட்டைகளாக மலரும். முக்கியமாக 1000 மாடல் பள்ளிகள் வெற்றி பள்ளிகள் திட்டம் மூலம் விரிவுபடுத்தப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் உடல்நலத்திற்காக விளையாட்டையும், உளவியல் பாதுகாப்பையும், வாழ்க்கை திறன் கல்வியையும் உறுதிப்படுத்துவோம்.
ஐந்தாவது உயர்கல்வித்துறை. உயர்கல்வி நிறுவனங்கள் மாணவருடைய மொத்த ஆளுமையை வளர்க்கக்கூடிய மையங்கள். அதன் மூலமாக நான் முதல்வன் 2.0 மூலம் கூடுதல் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு உலக அளவில் நம் இளைஞர்கள் போட்டி போட வழிவகுக்கப்படும். 2030ஆம் ஆண்டிற்குள்ளாக உயர்கல்வியில் மொத்த சேர்க்க விகிதம் 90 விழுக்காடு எட்டும் வகையில் நிறுவன கட்டமைப்பு விரிவாக்கப்படும். ஆராய்ச்சியும், புதுமையும் செழிக்க மைய ஆய்வகங்களும் சென்டர் ஆப் எக்சலன்ஸ் எனும் தொழிற்கல்வி சிறப்பு மையங்களும் நிறுவப்படும். செயற்கை நுண்ணறிவு ஏஐ, கல்வியுடன் இணைக்கப்படும். ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் ஏஐ ஆய்வகம் உருவாகும். பன்னாட்டு பல்கலைக்கழகர்கள் தமிழ்நாட்டில் வேர்விட்டு நம் மாணவர்கள் உலக அரங்கில் போட்டியிடுவதற்கு வழிவகுக்கப்படும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் உலகளாவிய வேலைவாய்ப்புகளை பெறக்கூடிய வகையில் விளையாட்டு திறன்மிகு மாணவர்களுக்கு பாடத்ததிட்டம் மூலம் அக்காடமிக் கிரேட்டஸ் வழங்கப்படும். ஆறாவது, பிற்படுத்தப்பட்ட நலத்துறை. நல்லிணக்கத்தின் அடையாளம் வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு. ஜெபிளி, தோல், ஆடை, கைவினை, கணினி, தொழிற்பயிற்சி போன்ற துறைகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பொருளாதார முன்னேற்றம் உறுதிப்படுத்தப்படும். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு கல்வியின் எல்லா நிலைகளிலும் சிறந்து விளங்க சிறப்பு திட்டங்கள் வகுக்கப்படும். சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கிற மாவட்டங்களில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். தேவைப்படும் இடங்களில் சமூகநீதி கல்லூரி விடுதிகள் திறக்கப்படும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வணிகம் தொடங்க நிறுவன கடன் வசதி அதிகரிக்கப்படும். சிறுபான்மை சமூகத்தினர், வணிகம் மற்றும் தொழில் தொடங்க கடன்பெறும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும்.
ஏழாவது ஆதிதிராவிடர் நலத்துறை. அடிப்படை உரிமை அசைக்க முடியா கண்ணியம். 2030ஆம் ஆண்டுக்குள் வீட்டு மனையற்ற ஒவ்வொரு ஆதிராவிடர் மற்றும் பழங்குடி குடும்பத்திற்கு வீட்டு மனைப்பட்டா வழங்கிட படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுடைய பள்ளி இடைநிறுத்தம் இல்லாத நிலையை அடைய நடவடிக்கைகள் எடுக்கப்படும். உண்டி உரைவிட பள்ளிகள் விரிவாக்கப்படும். 12 ஆம் வகுப்புக்கு பின் உயர்கல்வி நுழைவு, தொழிற்கல்வி இணைப்பு, தொடர்ச்சியான கண்காணிப்பு என முதல் தலைமுறை மாணவர்களுக்கு அரசு துணை இருக்கும். பெரும் வரவேற்பை பெற்றிருக்கக்கூடிய அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டம் விரிவுபடுத்தப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை பெருக்குவதற்கான திட்டங்களும் விரிவுபடுத்தப்படும். எட்டாவதாக ஊரக வளர்ச்சி துறை. கிராமங்களை பொருளாதார வளர்ச்சி மையங்களாக மாற்றுவோம். இந்தியாவின் முன்னேற்றத்திற்கு கிராம, நகர இடைவெளியை குறைப்பது மிகவும் அவசியம் என்று முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் சொன்னார். அவர் முன்வைத்த கிராமப்புறங்களில் நகர்ப்புற வசதிகளை வழங்குதல் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் கிராமங்கள் வளர்த்தெடுக்கப்படும். ஊராட்சிகளில் வருவாய் ஈட்டக்கூடிய உற்பத்தி திறன் கொண்ட நிலையான சொத்துக்களை உருவாக்குவதை முன்னுரிமையாக கொண்டு கிராம சந்தைகள் விளையாட்டு மற்றும் நல்வாழ்வு உட்கட்டமைப்புக்கள், கிராமப்புற நீர்நிலைகளை செம்மைப்படுத்தி காத்தல், கிராமங்களை பசுமையாக ஆக்குதல், வேளான் சாராத கிராமப்புற வேலைவாய்ப்பினை வழங்குதல், குறைந்த அளவில் அதிக பயன்பெறுதல் மற்றும் நல்லான வளர்ச்சியை நோக்கத்தை அடைய ஒரு உன்னதமான திட்டம் உருவாக்கப்படும். அதற்கு உத்தமர் காந்தி மாதிரி கிராமங்கள் திட்டம் என பெயரிடப்படும். காந்தியின் பெயர் நீக்கப்பட்டு வரக்கூடிய இந்த காலகட்டத்தில் அவருடைய பெயரை நம்முடைய மாதிரி கிராமங்கள் திட்டத்திற்கு சூட்டுகிறோம். இதனுடைய முதல் கட்டமாக 10 ஊராட்சிகளில் இந்த திட்டம் இப்போதே செயல்படுத்தப்படும்.
ஒன்பதாவதாக தொழில்துறை. தமிழ்நாடு இந்தியாவினுடைய பொருளாதார வல்லரசாக இருக்கிறது. அதற்கு எங்கள் இலக்கு 18 லட்சம் கோடி ரூபாய் முதலீடு, 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள், தமிழ்நாட்டில் ஏற்றுமதி 120 பில்லியன் டாலராக உயர்ந்து உலக வணிக வரைபடத்தில் தமிழ்நாடு இடம்பிடிக்கும். மேக் இன் இந்தியா, தமிழ்நாடு ஒவ்வொரு மாவட்டத்திலும் உயிர்வர மாவட்டந்தோறும் நவீன தொழில் பூங்கா, ஒரு சிறப்பு தொழில் தொகுப்பு, பொதுவசதி மையம் ஆகியவை அமைக்கப்படும். மின்னணவியல் துறையில் மதிப்பு கூட்டல் ஐந்து மடங்காக அதிகரிக்கப்படும். ஐடி ஏற்றுமதி 2.5 லட்சம் கோடியிலிருந்து, 6 லட்சம் கோடி ரூபாயாக இரண்டு மடங்கு ஆக்கப்படும். ஐடி துறையில் மட்டும் இரண்டு லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஜவுளி தொழில் நவீனமாக்கப்பட்டு திருப்பூர் கரூரில் 35,000 தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படும்” என்று தெரிவித்து அறிவிப்புகளை வெளியிட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/06/mkst-2026-03-06-18-05-31.jpg)