தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு அலுவலக வளாகத்தில், தாலுகா அலுவலகத்திற்கு எதிரில் உள்ள புள்ளியியல் துறை அலுவலக வாசலருகே இன்று காலை 50-க்கும் மேற்பட்ட முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் குப்பையில் கிடந்துள்ளன. கோவில்பட்டி, சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜேஷ் கண்ணா, தாலுகா அலுவலகத்திற்கு பணி நிமித்தமாக வந்தபோது, ஏடிஎம் அட்டை போன்று ஏராளமான அட்டைகள் குப்பையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதன்பின் தாலுகா அலுவலகத்திற்கு  சமூக ஆர்வலர் ராஜேஷ் கண்ணா இதுகுறித்து தகவல் தெரிவித்திருக்கிறார். அந்த அட்டைகளைப் பார்த்தபோது, அவை தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டைகள் என்பது தெரியவந்தது. அட்டைகளில் பயனாளிகள் அனைவரும் பாண்டவர்மங்கலம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

இதுகுறித்து தாலுகா அலுவலக அதிகாரிகள் கூறும்போது, “மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் கலெக்டர் அலுவலகத்திலிருந்து நேரடியாக பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்த அட்டைகள் எவ்வாறு குப்பையில் வந்தன என்பது குறித்து விசாரணை மேற்கொள்கிறோம்,” என்று தெரிவித்தனர். 

சமூக ஆர்வலர் ராஜேஷ் கண்ணா கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு அட்டை பெற முடியாமல் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பெற வரும் ஏழை, எளிய மக்கள், காப்பீட்டு அட்டை இல்லாததால் தினமும் அலைக்கழிக்கப்படுகின்றனர். இந்நிலையில், மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் குப்பையில் கிடப்பது அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் உள்ளது,” என்றார்.

Advertisment

இந்த அட்டைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என அட்டையின் பின்புறம் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் குப்பையில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.