Chief Minister challenges Can edappadi Palaniswami bravely support the VP-G Ram Ji scheme?
மகாத்மா காந்தி பெயரில் உள்ள மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்குப் பதிலாக ‘விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி’ என்ற பெயரில் புதிய திட்டத்தை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. இது தொடர்பான மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த புதிய மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில், நவோதயா பள்ளிகளைத் திறக்க திமுக அரசு வழிவகை செய்து வருவதால் இருமொழிக் கொள்கை பாதிக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லியை குளிர்விக்க எடப்பாடி பழனிசாமி அறிக்கை விட்டுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து முதல்வர் தெரிவித்துள்ளதாவது, “ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது ஒன்றிய பா.ஜ.க., அதற்கு ஒத்து ஊதுகிறார் திருவாளர் பழனிசாமி. விபி ஜி ராம் ஜி திட்டத்தில் 125 நாட்கள் வேலை என்பது ஏமாற்று வேலையே. 100 நாட்கள் வேலை உத்தரவாதம் என்று சட்டம் இருந்தபோதே, பா.ஜ.க. ஆட்சியில் மக்களுக்கு 20 முதல் 25 நாட்கள் மட்டுமே வேலை கிடைத்தது. அதற்கான ஊதியத் தொகையையும் திட்டச் செலவையும் மாதக் கணக்கில் விடுவிக்காமல் வஞ்சித்தனர். அந்த நிலுவைத் தொகையையும் நாம் போராடிப் பெற வேண்டிய அவலம்தான் இருந்தது.
தற்போது, ஒன்றிய அரசின் விருப்பத்தின் பேரில் அதிகாரிகள் விரும்பினால் வேலை வழங்கலாம் என்று விதிகள் மாற்றப்பட்ட பிறகு, ஓரிரு நாட்கள் வேலை கிடைப்பதே அரிதாகப் போகிறது. நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு பேரிழப்பைச் சந்திக்கப் போகிறது. திட்டச் செலவில் 40% தொகையை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்ற நிபந்தனை, ஜிஎஸ்டி வரி மாற்றங்களுக்குப் பிறகு கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் மாநில அரசுகளுக்குத் தரப்படும் சுமை, தண்டனை. கிராமப்புறப் பெண்கள், ஏழை விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றி வந்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு மூடுவிழா நடத்துவதற்குத் திருவாளர் பழனிசாமி வரவேற்புப் பத்திரம் வாசிப்பது மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம்.
மக்களைக் காக்கக் குரல்கொடுக்கச் சொன்னால், டெல்லியைக் குளிர்விக்க எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை விட்டுள்ளார். நாம் தட்டி எழுப்பிய பின் துயில்கலைந்து, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றத்தை மட்டும் கைவிடக் கோரிப் பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் தனது ஸ்டைலில் அழுத்தம் கொடுத்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. அத்தோடு, 100 நாள் வேலைத்திட்டம் 125 நாட்களாக உயரவுள்ளதாகவும் ஒரு பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார். 125 வேலை நாட்கள் என்பது பேப்பரில் மட்டுமே இருக்கப் போகிறது என அனைவருமே சுட்டிக்காட்டியும் அறியாத அப்பாவியா அவர்?
மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் சாதனை படைத்ததற்காக, தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) மூலமாகத் தமிழ்நாட்டின் தொகுதிகளைக் குறைக்கப் பார்ப்பதைப் போலவே, வறுமை ஒழிப்பில் நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்ததற்குத் தண்டனையாகத் தமிழ்நாட்டுக்கான வேலை நாட்களைக் குறைக்கப் போகிறார்கள் என நான் சுட்டிக்காட்டியிருந்ததை வசதியாக மறந்துவிட்டார் எதிர்க்கட்சித் தலைவர். ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்திய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தைச் சிதைத்து, நிதிச் சுமையை மாநிலங்களின் தலையில் விபி ஜி ராம் ஜி கட்டுவதைப் பற்றியும் வாய்திறக்க அவருக்கு வலிக்கிறது போலும். தனது ஓனர் பா.ஜ.க. செய்வது சரி என்றால், துணிச்சலாக, வெளிப்படையாக விபி ஜி ராம் ஜி திட்டத்தை பழனிசாமியால் ஆதரிக்க முடியுமா? சவால் விடுகிறேன்” என்று கூறினார்.
Follow Us