கரூரில், த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் ரோட் ஷோ-க்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரும், அதுவரை எந்த கட்சிகளுக்கும் ரோட் ஷோ-க்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பி.ஹெச்.தினேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில்குமார் முன் நேற்று (03-10-25) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கரூரில் நடந்த சம்பவம், மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்றும் குழந்தைகள் பலியான நிலையில், கட்சி தொண்டர்களை, ரசிகர்களைப் பொறுப்பற்ற முறையில் கைவிட்டு விட்டு ஓடிய, த.வெ.க. தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகளுக்குத் தலைமைப் பண்பு இல்லை என்றும் கூறி தவெக கட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், கரூர் சம்பவத்தை விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் நாமக்கல் எஸ்பி அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் விசாரணையின் போது, ‘கூட்ட நெரிசல் சம்பவம் நடப்பதற்கு முன்பாக, கரூர் நோக்கி வந்த விஜய்யின் வாகனத்தை ஒட்டி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் விபத்தில் சிக்கினார்கள். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகின. பேருந்து விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதா, வழக்குப்பதிய என்ன தடை?. காவல் துறை தனது கைகளைக் கழுவி விட்டதா?. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்குக் கருணை காட்டுகிறீர்களோ?. பேருந்து மோதியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாவிட்டால் மக்கள் எப்படி நம்புவார்கள்?. வழக்குப்பதிவு செய்து, பிரச்சார வாகனத்தைப் பறிமுதல் செய்திருக்க வேண்டாமா?. இந்த விஷயத்தில் நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. விஜய்யின் பிரச்சார வாகனத்தை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.
அதே போல், தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மற்றும் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, ‘பொதுக்கூட்டம் உள்ளிட்ட எந்த கூட்டமாகினும், மாநில தேசிய நெடுஞ்சாலைகள் அருகே நடத்தப்படக் கூடாது. பொதுக்கூட்டங்களின் போது குடிநீர், மருத்துவம், ஆம்புலன்ஸ், கழிவறை போன்ற அடிப்படை தேவைகளை செய்து தரப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், கரூர் சம்பவத்தில் அரசியல் நோக்கத்தோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்ட வேண்டாம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “கரூர் துயரம் குறித்து உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக கவனத்தில் கொண்டு செயலாற்றி வருகிறது. கரூரில் நடந்த துயரத்தால் நாம் அனைவருமே நெஞ்சம் கலங்கிப் போயிருக்கிறோம். தம் அன்புக்குரியோரை இழந்து தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் கண்ணீரையும் கண்டு தவிக்கிறேன். உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தனது விசாரணையைத் தொடங்கும். இதன் மூலம், முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் என்று மாநிலத்தின் முதலமைச்சராக மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். அனைத்து மட்டங்களிலும் பொறுப்பு உறுதிசெய்யப்படும். பலவற்றிலும் இந்தியாவுக்கே முன்னோடியான தமிழ்நாடு, கூட்ட நெரிசல் விபத்துகளைத் தவிர்ப்பதிலும் நாட்டுக்கு வழிகாட்டும்.
மாநிலம் முழுவதும் துறைசார் வல்லுநர்கள், அரசியல் கட்சியினர், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என அனைவரோடும் கலந்தாலோசித்து ஒரு முழுமையான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) வடிவமைப்போம். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் பின்பற்றத்தக்க மாடலாக இது அமையும். துடைக்க முடியாத இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம். இந்தக் கூட்டு முயற்சியில் அனைவரது யோசனைகள், ஆலோசனைகளையும் வரவேற்கிறேன். ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பில்லாதது. நம் மக்களின் இன்னுயிரைக் காக்கவும், இனி இப்படி ஒரு பெருந்துயரம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குமே நிகழாமல் தடுக்கவும் ஒன்றிணைவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.