யஷ்வந்த் வர்மா விவகாரம்; வழக்கில் இருந்து விலகிய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்!

yashwantsupre

Chief Justice B.R. Gavai recuses himself from the case Yashwant Verma case

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி யஷ்வந்த் வர்மா, ஹோலி பண்டிகையை ஒட்டி தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த போது அவரது வீட்டில் கடந்த மார்ச் 14ஆம் தேதியன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில், கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில், நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஜொலிஜியம் உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி நீதிபதி யஷ்வந்த் வர்மா ஏற்கெனவே பணியாற்றி வந்த அலகாபாத் நீதிமன்றத்திற்கே அவரை பணியிட மாற்றம் செய்யபட்டார். இதற்கிடையில், நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த பஞ்சாப், ஹரியானா தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சல் பிரதேச தலைமை நீதிபதி சந்தவாலியா, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகிய 3 பேர் அடங்கிய குழுவை உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமைத்தார். இந்த குழு, இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிடம் அறிக்கையை சமர்பிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு சமர்பித்த ரகசிய அறிக்கையை தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு, பிரதமர் மோடிக்கும் அனுப்பினார். விசாரணையில் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் அவரை பதவி நீக்கம் செய்யப்போவதாக சில தினங்களாக தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று (21-07-25) டெல்லி உள்ள நாடாளுமன்றத்தில் தொடங்கியது. அப்போது, பண மூட்டை சிக்கிய விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவியில் இருந்து நீக்க கோரிய தீர்மானம் தொடர்பாக நோட்டீஸ் அளிக்கப்பட்டது. மக்களவை எம்.பிக்கள் 145 பேரும், மாநிலங்களவை எம்.பிக்கள் 63 பேரும் கையெழுத்திட்ட நோட்டீஸ் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், தனது இல்லத்தில் இருந்து பணம் மீட்கப்பட்டதையடுத்து மூன்று நீதிபதிகள் கொண்ட உள்ள குழுவின் கண்டுபிடிப்புகளை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்காக மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, ராகேஷ் திவேதி, சித்தார்த் லூத்ரா, சித்தார்த் அகர்வால், வழக்கறிஞர்கள் ஜார்ஜ் போத்தன் பூதிகோட் மற்றும் மணிஷா சிங் ஆகியோருடன் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். இந்த வழக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன் மற்றும் ஜோய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (23-07-25) விசாரணைக்கு வந்தது. அப்போது கபில் சிபல் ஆஜராகி, ‘அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியின் சார்பாக நாங்கள் மனு தாக்கல் செய்துள்ளோம். சில அரசியலமைப்பு சிக்கல்கள் இதில் உள்ளன. விரைவில் ஒரு அமர்வை அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று வாதிட்டார்.

இதனை கேட்ட தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ‘எனக்கு முன் பதவியில் இருந்த ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுடன் கலந்துரையாடல்களில் பங்கேற்றேன். இந்த வழக்கை நான் கையில் எடுப்பது சரியாக இருக்காது. இந்த வழக்கில் இருந்து விலகுகிறேன். இந்த வழக்கு தொடர்பாக நாங்கள் ஒரு அமர்வு அமைப்போம்” என்று கூறினார். 

 

Supreme Court yashwant varma Justice BR Gavai
இதையும் படியுங்கள்
Subscribe