சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா வரும் இன்று (05-03-26) ஓய்வு பெறுவதையொட்டி, கேரளா உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்து வந்த சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை, சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்றக் கொலீஜியம் கடந்த பிப்ரவரி நியமிக்கப் பரிந்துரைத்தது. அதன்படி, நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ள சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, அரவிந்த் எச். தர்மாதிகாரி -  சுபா தர்மாதிகாரி தம்பதியினருக்கு மகனாகக் கடந்த 1966ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி அன்று தற்போதைய சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூரில் பிறந்தார். இவர் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் மற்றும் சட்டத்தில் இளங்கலைப் பட்டங்களைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து 1992ஆம் ஆண்டு ஜபல்பூரில் உள்ள மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். இதனையடுத்து 2000 முதல் 2015ஆம் ஆண்டு வரை மத்திய அரசின் ஆலோசகராக வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

மேலும் வருமான வரித் துறை, இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய கலால் துறை (மூத்த வழக்கறிஞர்), ஹோஷங்காபாத் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களுக்காகவும் ஆஜராகியுள்ளார். கேந்திரிய வித்யாலயா சங்கதன், பிஎஸ்என்எல் மற்றும் போபால் எரிவாயு விபத்து நிவாரண நல ஆணையர் சார்பாகவும் இவர் வாதிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் பின்னர், 2018ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி நிரந்தர நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.

Advertisment

இதனையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கேரள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, நீதிபதியாகப் பதவிப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ள இவர், புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்கவுள்ளார்.