சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி வளாக கேண்டீனில் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.  அதில், “கடந்த 28.01.2026 அன்று சமூக நல அலுவலகத்தின் ஒன் ஸ்பாட் மைய நிர்வாகி அளித்த புகாரில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது பெண்ணை, அரசு கலைக் கல்லூரி, நந்தனம் வளாகத்தில் கேன்டீன் நடத்தி வந்த முத்துச்செல்வம் மற்றும் அங்கு பணிபுரிந்து வந்த குணசேகரன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோருடன் சேர்ந்து கல்லூரி கேன்டீன், கல்லூரி வளாகத்திலுள்ள அறை ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்டவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்துள்ளார். 

Advertisment

இந்த புகாரின் அடிப்படையில், சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உரிய பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, இது தொடர்பாக  தீவிர விசாரணை மேற்கொண்டதில், பாதிக்கப்பட்ட நபரை கேன்டீன் உரிமையாளர் முத்துச்செல்வம் கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு தனக்குத் தெரிந்தவர் மூலம் அழைத்து வந்து,கேன்டீனில் பணியமர்த்தியுள்ளார் என்பது தெரிய வருகிறது. இவர், இந்த கேன்டீனை கல்லூரியுடன் நேரடி ஒப்பந்தத்தின் மூலம் கடந்த 12 வருடங்களாக நடத்தி வருவதாகத் தெரிய வருகிறது. 

Advertisment

இந்த விசாரணையின்போது, குற்றச்சாட்டுக்குட்பட்ட நபர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதின் அடிப்படையில்,  முத்துச்செல்வம், குணசேகரன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும், பாதிக்கப்பட்டவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனை வழங்கப்பட்டது.இவ்வழக்கு சம்மந்தமாக தீவிர புலன் விசாரணை செய்து, சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கூடிய விரைவில் அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.